முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடைந்து விழும் உயிர்க்கண்ணிகள்

கொலீசிய திறந்தவெளி மைதானத்தில் சிங்கங்கள், சமய கைதிகள், நீரோ மன்னன், காவலர்கள், ஏராளமாய் பார்வையாளர்கள் - பெரும்பாலும் ஏழைகள்.

மன்னன் கையசைக்க, சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட கைதிகளை நோக்கி சிங்கங்களின் கூண்டுகள் திறந்துவிடப்படுகின்றன.

ஓலம், ஆர்ப்பரிப்பு, உறுமல், குருதி என அன்றைய விளையாட்டு விறுவிறுப்பாக நடக்கிறது.

இது நடந்தது 2000 ஆண்டுகளுக்கு முன்பு. அங்கிருந்து நகர்ந்து நிகழ்காலத்திற்கு வருவோம்.


இன்று நம் (உலக மக்களின்) வாழ்வியல்கூட கொலீசிய சர்க்கஸ் போலத்தான். இந்த அரங்கில் உள்ள ஏதோ ஒன்றாகவே நாம் அனைவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... சிங்கமாகவோ, பிணைக்கப்பட்ட கைதியாகவோ, காவலராகவோ, பார்வையாளராகவோ, மன்னராகவோ...


சிதைந்துகொண்டிருக்கும் ஒரு பேரரசின் அழிவுச்சத்தங்கள், உள்ளிருப்போரின் காதுகளில் விழாமலிருக்க, கவனத்தை வேறிடத்தில் திருப்பவே கொலீசிய சர்க்கஸ்.

டைனோசார்கள் திடீரென ஏன் அழிந்தன என இன்று வரை ஊகம் மட்டுமே செய்யமுடிந்த நவீன அறிவியல் விளக்கொளியில் உலக வணிகம் நம்மை இட்டுச்செல்லும் நுகர்வுப்பாதையின் இருள் விளிம்பில் கூட்டம் கூட்டமாய் சாவது இன்றைய உலகின் பேருயிர்களான யானைகளாக இருந்தால் என்ன? திமிங்கிலங்களாக இருந்தால் என்ன? சிட்டுக்குருவியாக இருந்தால் என்ன? சின்னஞ்சிறு தேன் பூச்சியாக இருந்தால் என்ன? 

அவர்கள் நாம் அல்லவே! பெரு நுகர்வின் போதை நம்மை சிந்திக்க விடமாட்டேன் என்கிறதே!



நவீன அறிவியல், பழைய உலகை நுணுக்கமாய் ஆராய்ந்து நமக்கு சொன்னது இதுதான்: 

இந்த உலகு பல 'கால நிலைகளை' (Eons and Ages) தாண்டி வந்திருக்கிறது. இத்தனை நிலைகளிலும் இல்லாத அளவுக்கு, மனித முயற்சியில் ஆன ஒரு கால நிலை, Anthropocene என அழைக்கப்படுவது. இந்த நிலை நாம் நம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தினால் குறிக்கப்படுவது, மற்ற எல்லா கால நிலைகளையும் விட துரிதமாய் முடிக்கப்போகிறோம், மடியப்போகிறோம் என்பதே. 18 ஆம் நூற்றாண்டின் இயந்திரப்புரட்சி இதற்கு வித்திட்டதாக ஒரு கணக்கும் உண்டு.

சரி, ரோமப்பேரரசுக்கு வருவோம். நீரோ மன்னன் வாழ்ந்த காலத்திலேயே பேரரசின் சரிவு நிகழ்ந்துகொண்டிருந்தது.  அவன் மறைந்த பிற்பாடு சில பல ஆண்டுகளில் முற்றிலும் சிதைந்தே போனது.

பேரரசு சிதைந்துபோன காலத்தில் கொலீசிய சர்க்கஸ், சிங்கங்கள், கைதிகள், பார்வையாளர்கள், மன்னர்கள் என பல வேடந்தாங்கியிருந்த நாம் (மக்கள்) என்ன செய்தோம்?


அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்கு விவசாயம் செய்தோம். விவசாயம் மட்டுமே செய்தோம்.


என்ன ஆனது அதனால்?

பல்லுயிர் வாழ்வு நிலை பெற்றது, இளைப்பாறியது, உணவு பெருக்கியது, ஓய்வெடுத்தது, சிந்தித்தது, கற்பனை செய்தது, கலை வளர்த்தது, வணிகம் வளர்த்தது, Renaissance என்கிற 'ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்திற்கு' வித்திட்டது!

அன்று ரோமப்பேரரசு அழிந்தபோது மாநுடத்தை காத்த வேளாண்மை, இன்றும் காத்திருக்குது, உலகமயமான பெருவணிக பேரரசின் இறுதிப்பொறிகள் காற்றில் அணைவதற்காய்.

கொரோனா பற்றவைத்த பெருநெருப்பு, இன்னும் பலகாலம் புகையும், பின்பு தணியும். புகை மண்டலம் விலகி நம் பார்வை தெளிவடைகையில் நாம் காணும் காட்சி வேளாண்மையாகத்தான் இருக்கும்.

அதுவரையில் நம் வாழ்வை இதுவரை தாங்கியிருந்த இன்றியமையாத கண்ணிகளான யானைகளும் திமிங்கிலங்களும் சிட்டுக்குருவிகளும் தேனீக்களும் இன்னபிற உயிரினங்களும் தொடர்ந்து நம்மோடு வாழ வேண்டுமென்று ஒரு சிறு வேண்டுதலாவது நாம் செய்வோமே!

ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒளித்துவைக்கப்பட்ட அரக்க உயிர் பற்றி நம் கதைகளில் படித்திருப்போம். நமது உயிரைக்கூட பல வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகளின் உயிரில்தான் ஒளித்துவைத்திருக்குது இயற்கை...

இந்த உண்மையை உணர்ந்தவர் உறக்கச்சொல்வோம், "வேளாண்மை வணிகமல்ல; வாழ்வியல்"!

பேரன்புடன்,

பாபுஜி

Picture credit:


Elephants - Business Insider web article

Whales, கொலீசியம் - Wikimedia Commons

Bees - environmentamerica.org

Nero - Brittanica.com 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...