முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜீனியஸ்ங்க நீங்க!

 

ஒரு மன நல மருத்துவரிடம் தம் மீன் குழந்தையை அதன் மீன் பெற்றோர்கள் அழைத்து வந்தனர்.

'என்ன சிக்கல்?' என்றார் மருத்துவர்.

'நாங்க பட்ட கஷ்டம் எதுவும் இவன் படக்கூடாதுன்னு பாத்து பாத்து வளக்கிறோம். எங்களால முடியாதத இவனாவது பண்ணுவான்னு எதிர்பார்க்கிறோம். ஆனாலும் இவன் மரம் ஏற மறுக்கிறான். கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி கூட try பண்ணிட்டோம், யார்கூடவும் பேச மாட்டேங்கிறான், தனியாவே கிடக்கான்!'

அவர் அவர்களுக்கு சொன்ன தீர்வே இப்பதிவு.

எந்த காகமும் தன் குஞ்சுகள் பொன்னிறத்திலில்லாது கருகருவென இருப்பதை நினைத்து வெம்புவதில்லை.

ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு என கற்பிதம் செய்கிறோம், நம் குழந்தைகளையும் அவ்வாறே நினைத்து வளர்க்க முயல்கிறோம் :-)

Special என்கிற உணர்வு, காக்கையானாலும் அதற்கு அதனது குஞ்சு special என்ற உணர்வில் உண்டாக்கப்பட்ட பழஞ்சொல் இன்று நமது எதிர்பார்ப்புகளின், ஏமாற்றங்களின் இடையில் நசுங்கிப்போய் நிற்கிறது, நம் குழந்தைகள் போலவே!

இந்தப்பதிவின் drift புரிந்தவர்கள் முதுகில் தட்டிக்கொண்டு உற்சாகமாய் தொடருங்கள். மற்றவர்களும் என்னோடு தொடர்ந்து இப்பதிவில் பயணப்படுங்கள் :-)

1970களில் பிறந்த எனது தலைமுறை வரையில், முதல் குழந்தை பிறந்தவுடனே குடும்ப பொறுப்பு எனும் ஒரு மாயக்கயிறு அதனது தொப்புள்கொடியுடன் பிணைந்துகொள்ளும், ஆண் குழந்தையானால். பெண் குழந்தையானால், 20-23 வயதுக்குள் வேறிடம் போகவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் பிணைந்துகொள்ளும்.

நம் பெற்றோர், தங்களுடைய எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும், வலிகளையும், பயங்களையும் பாதை காட்டும் கருவிகளாக நமக்கு தந்து, மீறினால் பல வழிகளில் தண்டித்து...என நாமும் எங்கோ ஓரிடத்தில் அவரவர் வாழ்வில் கரை ஒதுங்கிவிட்டோம்...என்கிற நினைப்பில் இதே time tested model ஐ இன்றைய தலைமுறையிடம் திணிக்க நினைக்கையில் தொடங்குகிறது சிக்கல்.

நமது தலைமுறை, கடிவாளமிடப்பட்ட தலைமுறை. இன்றைய தலைமுறை Born Free தலைமுறை.

இவர்களின் சமூக தொடுபுள்ளிகள் அனைத்திலும் (social touch points) எதிர்ப்புகள் இதனாலேயே எழுகின்றன, வீடு முதல்!

உணவு, உடை, வசிப்பிடத்தில் தேவைக்கும் ஆசைக்கும் ஓதுக்கவேண்டிய இடம் தொடங்கி சகலத்திலும் சிக்கல் கண்ணுக்கு தெரியாத சிலந்தி இழைபோல பற்றிப்படர்ந்து இறுக்குவதை உணரக்கூட நேரமின்றி அவரவர் இலக்கு நோக்கி அவரவர் ஓட்டம்...

விழாக்காலங்களில்கூட, விழா நாட்களில்கூட, வீட்டில் அனைவரும் கூடுவது அரிதாகிப்போகிறது. 

மருத்துவமனைகளிலாவது இன்று இதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வரும் காலங்களில் இதுவும் மாறிப்போகும்...

மாற்றம் ஒன்றே மாறாதது என்கிற ஆதி தத்துவத்தை உணராமல், பழகாமல் நம் வாழ்வு நம்மிடமிருந்து நழுவிக்கொண்டிருப்பதைக்கூட உணராமல் trivia பின்னால் பக்தர்களாக அலைகிறோம் (where entertainment is the ONLY God regardless of the garbs in which  it appears).

"பொறுப்புகள் இருப்பதால்தானே வரையறைகள் வகுக்கிறோம்? அவற்றுள் வாழ்கிறோம்?

வாழ்வென்பதே வீணா? மகிழ்வாய் அனுபவிக்க, கொண்டாட ஒன்றுமே இல்லையா!" 

என்ற கேள்விகளும் கவலைகளும் நமக்குள் எழுவது இயல்பே.

"வாழ்வென்பது ஒரு மகா உற்சாகமான கொண்டாட்டம், ஒவ்வொரு நாளும், நொடியும்" என்று நான் சொன்னால் 'ஏய் ஜல்லியடிக்காதே, தனக்கு வந்தாதான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்... உனக்கு கஷ்டமே வந்ததில்லையா?!' என்று நீங்கள் முழங்குவதும் இயல்பே.

ஐன்ஸ்டைன் ஒரு மாபெரும் அறிவியல் ஆளுமை. உலகம் இவர்போல இன்னொருவரை கண்டதில்லை என்ற அளவுக்கு உலகம் பற்றிய நமது அறிவியல்  புரிதலை பல மடங்கு உயர்த்திய வித்தைக்காரர் இவர் என்பதும் நாம் அறிவோம்.

இவரது சில மேற்கோள்களின் வாயிலாக, இவர்போன்ற இன்னும் சில ஆளுமைகளின் மேற்கோள்களின் வழியாக இப்பதிவை அதன் மையப்புள்ளிக்கு நகர்த்துகிறேன், Be with me!

ஐன்ஸ்டைன்:

"இந்த வையகத்தில் முடிவில்லாது நீள்வது இரண்டு மட்டுமே, ஒன்று நமது வான்வெளியின் எல்லை. இன்னொன்று மனித இனத்தின் முட்டாள்தனம். எனக்கு வான்வெளி பற்றிமட்டுமே உறுதியாக தெரியவில்லை!"

"வாழ்வதற்கு இரண்டே வழிகள்தான். ஒன்று, நாம் காணும் நிகழ்வுகள் அனைத்தும் அற்புதங்கள் என (கொண்டாட்டமாய்) வாழ்வது. இன்னொன்று, எதுவுமே அற்புதமில்லை என (நிலைகுலைந்து) வாழ்வது"

"ஆறு வயது குழந்தைக்கு எளிதாய் ஒன்றை நம்மால் விளக்கமுடியவில்லை என்றால் நமது புரிதல் அரைகுறையானது என்பதே நிஜம்"

"நேற்றின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள். இன்று வாழ். நாளையை எதிர்பார். கேள்விகேட்பதை மட்டும் நிறுத்தாதே"

"இன்றைய ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு என்ன தெரியாது என கண்டுபிடிக்கவே கேள்விகளை பயன்படுத்துகிறார்கள். இதை விட்டுவிட்டு, அவர்களுக்கு என்ன தெரியும்? எவற்றை தெரிந்துகொள்ளும் திறன் இருக்கிறது? என கண்டுபிடிக்க கேள்விகளை பயன்படுத்தவேண்டும்" 


கலீல் கிப்ரான்:

"உங்கள் குழந்தைகள் உங்களது குழந்தைகளே அல்ல!. வாழ்வெனும் பேராற்றல் தன்னைத்தானே நீட்டித்துக்கொள்ள (உங்கள் வழியே) படைத்துக்கொண்ட மகன்கள் / மகள்கள் அவர்கள்!  உங்களது அன்பை மட்டுமே நீங்கள் அவர்களுக்கு கொடுக்க இயலும், உங்களது சிந்தனைகளை அல்ல. ஏனெனில் அவர்களுக்கான சிந்தனைகளை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். 

உங்களால் அவர்களது உடல்களுக்கு வீடு அமைத்துத்தரமுடியுமே தவிர அவர்களது ஆன்மாக்களுக்கு அல்ல. ஏனெனில் அவர்கள் (அவர்களது ஆன்மாக்கள்), நாம் காணமுடியாத எதிர்காலமெனும் வீட்டில் வாழப்போகின்றன'

பழமொழி ஒன்று (சொன்னவர் யாரென தெரியவில்லை. கண்டிப்பாய் ஐன்ஸ்டைன் அல்ல!):

" பிறப்பில் அனைவருமே ஜீனியஸ்தான்.  ஆனால் மரமேறத்தெரிந்தால்தான் மீன்கள் ஜீனியசாக முடியும் என்று வரையறுத்தால், மீன்கள் தம் வாழ்நாள் முழுவதும் தாம் முட்டாள்கள் என்ற குற்ற உணர்வோடு வாழவேண்டியிருக்கும்!"

குழந்தைகள் மீன்களில்லை. அவர்களது ஜீனியசை நாம் வரையறுக்க முயல்வது வீண். அவர்கள் நமது குழந்தைகளே இல்லை!

நம் அனைவரையும் இணைக்கும் ஒற்றைப்புள்ளி 'மனிதம்' மட்டுமே!

மனிதர்கள் பற்றியும், மனிதம் பற்றியும் ஐன்ஸ்டைனின் இரு புகழ்பெற்ற மேற்கோள்களை இப்பதிவில் படங்களாக இணைத்துள்ளேன். 



மனிதம் பழகுவதை நம் வீட்டிலேயே தொடங்குவோமே, நம் குழந்தைகளிடமும், வாழ்க்கைத்துணையிடமிருந்தும்!

நாம் எல்லோருமே ஜீனியஸ் தான். கண்டிப்பாக நம்மால் செய்யமுடியும். நான் சொல்லலீங்க, ஐன்ஸ்டைன் சொன்னாரு :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...