முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூமித்திருவிழாவில் தொலைந்துபோன குழந்தைகள்


நம்மை வீட்டுக்கு இட்டுச்செல்லும் சாலைகள்
வேறெங்கும் செல்வதில்லை.

கிணற்றில் நீர்வாளி நகர்த்தும் உருளை
வேறெங்கும் நகர்வதில்லை.

வெளிச்சத்திலும் இருளிலும் அங்கேயே அவ்வண்ணமே.

அவை வெறும் கருவிகள்தானே என்றால், நாமும் அவ்வாறுதானே?

உணவுச்சங்கிலியில், வாழ்வியல் சங்கிலியில், நமக்கென ஒரு இடம், ஒரு வேலை, தெளிவாக வகுத்துத்தந்திருக்கிறது இயற்கை.

சாலைகள் ஓய்வு விரும்பி புரண்டு ஒருபுறம் சாய்ந்து படுத்தாலோ, கிணற்று சகடை ஒரு திசையில்  மட்டுமே சுற்ற முடிவுசெய்தாலோ அதன் படைப்பிற்கான பயன் கெட்டுவிடுமல்லவா?

இந்த தெளிவை நமக்கு தந்த அறிவு மட்டும் ஏனோ நம்மை ஒரு திசையில் மட்டுமே சுற்ற, நிலைமாறிப்படுக்க சொல்கிறதே அது ஏன்? நாமும் அவ்வாறு செய்ய முயல்கிறோமே அது ஏன்?

மனிதர்போலவே சிந்தித்து 'சுயநலம்' மட்டுமே போற்றும் ஆற்றல் இன்னொரு உயிருக்கு நம் பூமியில் கிடைத்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

வண்டிகளில் மாடுகளின் இடத்தில் நாம் பிணைக்கப்பட்டு வண்டி இழுக்க நேரலாம்...

நாய் எஜமானர் தூக்கி வீசும் பிஸ்கட்டை தாவி வாயில் கவ்வி விலங்குகள் போலே நான்கு 'கால்களில்' நடக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகலாம்...

பன்றிகள் நடத்தும் மாமிசக்கடைகளில் உப்பு மஞ்சள் பூசிய துண்டுகளாக தலைகீழாக தொங்கும் நிலை நேரலாம்...

நரிக்கூட்டத்தால் வன்புணர்வு செய்யப்படலாம்...

என்றெல்லாம் அச்சுறுத்தமாட்டேன். அவ்வாறு நிகழவும் நிகழாது.

நம்மைச்சுற்றி இருக்கும் அநேக உயிர்கள் நம்மைவிட மேன்மையான அறிவையும் உணர்வையும் கொண்டு இங்கு வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன, யாருக்கும் கெடுதலின்றி. 

நாம்தான் ஆணவம் கண்களை மறைக்க இறுமாப்போடு நடைபோட்டுக்கொண்டிருக்கிறோம்.

சற்றே சிந்தித்துப்பார்ப்போம் வாருங்களேன்...

யானைகள் - மாபெரும் விலங்குகள். நான்கு பேர் வாழக்கூடிய நம் அடுக்குமாடி வீடுகளில் ஒரு யானைக்குடும்பம் தன் 'பின்பக்கத்தை' அமர்த்தக்கூட இடம்காணாது. மரங்களை ஒடித்து உண்டு தாம் நடக்கும் தடமெலாம் தம் கழிவின்வழியே காடுவளர்க்கும் உயிர்வளர்ப்பான் இனம் இவை.

புலிகள் - ஏனைய விலங்குகள் அஞ்சி நடுங்கும் ஆற்றலுடன் விளங்கினாலும், மனம்போல கொன்றுபுசிக்க வாய்ப்பிருந்தும் ஏனைய விலங்குகள் எவையும் புலிகளை ஒதுக்குவதில்லை. பசியாறிய புலிகளின் அருகில் மான்கள் மேய்வது இயல்பாய் நடக்கிறது. புலிகள் போன்ற வேட்டையாடிகள் இல்லா காடுகள் பரப்பு சுருங்கி விரைவில் பாலைநிலமாவது நம்மில் எத்தனைபேர் அறிவர்?

எறும்புகள் - மண்ணுள்ளே சிறு துளையிட்டு உள்ளே ஓராயிரம் சுற்றம் வாழ கோட்டை கட்டி, தேவைக்கு உணவு சேர்த்து, இயற்கை விழித்திருக்கும் நேரமெல்லாம் ஓடி உழைத்து, பயிர் தாக்கும் பூச்சிகளை உண்டு பயிர் காத்து ஏனைய உயிர் வளர்த்து வாழ்பவை.

தேனீ - தன் உணவுக்கு வேண்டியதை இயற்கை வேறெங்கோ (மலர்களுக்குள்) பொதித்துவகத்திருப்பதை உணர்வினாலே அறிந்து தேன் சேர்த்து, உணவுத்தேடலின் உப பயனாக மலர்களை கருத்தரிக்கவைத்து...

இப்படி உருவில் சிறிது பெறிது என்ற வேற்றுமையன்றி இவையனைத்தும் ஒத்திசைந்து மாபெரும் இயற்கையின் ஓயாது சுழலும் சக்கரங்களாய் தம்தம் இடத்தில் தமக்கான பணியை தெளிவாய் செய்து, கல்கூரை வீடுகள், குளிரூட்டிகள், பெருவிசை வாகனங்கள், செயற்கைக்கோள் வழி நாராசங்கள் எவையுமின்றி, நோய் நொடியின்றி, இனங்களை அழிக்கும் பெரு வெறுப்பு இன்றி, புவி நீங்கி வேறிடம் செல்லும் பேராவல் பெருமுயற்சி எதுவுமின்றி வாழ்தலே இயல்பாய் வாழ்கையில்...

நாம் மட்டும் எப்படி தடம்மாறிப்போனோம்?

பூமித்திருவிழாவில் தொலைந்துபோன குழந்தைகள் போல நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

இது அறிவின் பிழை அல்லவா?

இதற்காகவா இயற்கை நமக்கு சிந்திக்கும் நுண்ணறிவு தந்தது?

சிந்திப்போமே...வாழ்வோமே வேறு விதமாய்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...