முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறுக்க மறந்த கோழி


கோழியொன்று கையிலே பையுடன் ரேஷன் கடைக்கு புறப்பட்டது.

எதிரில் வந்த பலநாள் நட்புக்களுடன் வணக்கம் பறிமாறிக்கொண்டே வந்ததில் லேட் ஆகிப்போச்சி.

ரேஷன் கடையை இழுத்து மூடி கடைக்காரனும் புறப்பட்டு போயாச்சி. பொட்டு அரிசி கூட தரையில் சிந்தாமல் டெக்னாலஜி துணையோடு பட்டுவாடா நடப்பதால் துடைத்து எடுக்கவும் ஒன்றுமில்லை. 

இனி அடுத்த வாரம்தான் அரிசி கிடைக்கும் என்ற நினைவில் கொண்டையை தொங்கப்போட்டுக்கொண்டு வெயிலில் உஸ் உஸ் என காற்றை ஊதிக்கொண்டு அலுவலகம் நோக்கி நடையை கட்டியது.

நிழலுக்கு ஒதுங்க மரங்களில்லை. தார் சாலைகள் அதன் கால் தோலை வறுக்க, வயிற்றை பசி கிள்ள, தள்ளாடி தள்ளாடி நடைபோட்டது.

சாலையில் விரையும் வாகனங்களில் செல்பவர் எவரும் கோழியை கவனித்ததாக தெரியவில்லை. கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகூட சுமக்கமுடியாத கனமாக ஆகிப்போன உணர்வில் எட்டி நடை போட்டது.

கண்கள் செருகி கால்கள் பிண்ணி தரையில் சாய்ந்து மயக்கமாகிப்போன அந்த நொடிகளில் அதன் நினைவுப்படலத்தில் விரிந்தது காட்சியொன்று...

'மரங்கள் அடர்ந்த பச்சை நிலம். விதம் விதமான வண்ணங்களில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மலர்கள், பழங்கள்...

அட! பறவைகளில் என்னைப்போலவே பல கோழிகள்!! 

இது என்ன விந்தை?! கால் விரல்களால் தரையைக்கிளறி...எதையோ அலகால் எடுத்து...வாயில் இட்டு உண்கிறதே! அதன் பின்னான அதன் நடைகூட மகிழ்வாய் இருக்கிறதே! என்னைப்போன்ற கோழிகள் அனைத்தும் இதையே வேலைபோல செய்கின்றனவே! எனக்கு மட்டும் ஏன் இந்த வித்தை தெரியவில்லை????'

நினைவு மீண்ட கோழியைச்சுற்றிலும் ஏராளமான கருவிகள், சத்தமிடும், விளக்குகள் பல நிறங்களில் மின்னும் கருவிகள்...

அதற்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த நிபுணர், கவலையோடு நெற்றி சுருக்கி தனது கைபேசி நோட்டில் பதிந்தார் இப்படி; 'நமது மரபு மாற்றல் வைத்திய கண்டுபிடிப்பில் ஏதோ பிழை நேர்ந்திருக்கிறது. இல்லையென்றால் இந்த நோயாளிக்கு தன் பூர்வாசிரம நினைவுகள் ஏன் முற்றிலும் அழியாமல் எஞ்சியிருக்கிறது,? இது தவறாச்சே!...'

இந்த தவறு வெளியே தெரிந்தால் தன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்துவிடுமே என்ற கவலை உந்தித்தள்ள, அவர் அந்த கோழியை உற்றுநோக்கி, தாழ்வான குரலில் சொல்லத்துவங்கினார்; 'மிஸ்டர் கோழி, உங்களது எண்ண அலைகளில் கொடிய வைரஸ் ஒன்று நுழைந்துவிட்டது. அது மனப்பிறழ்வுகளை நிசம் போலவே உணரவைத்து குழப்பும். நான் சில மருந்துகள் தருகிறேன். இரு வாரங்களில் குணப்படுத்தி விடுவேன். அதுவரை இங்கேயே ஓய்வில் இருங்கள். உங்களது இன்ஷ்யூரன்சு விபரங்களை சரிபார்த்துவிட்டேன். உங்களுக்கு மூன்றுவேளை அரிசி உணவு தருவதற்கு சேர்த்தே இன்ஸ்யூர் செய்யப்பட்டிருக்கிறீர்கள். கவலை வேண்டாம். விரைவில் வீடு திரும்பலாம்'.

அரிசி உணவு கிடைக்கப்போவது மகிழ்ச்சி தந்தாலும் தரை கிளற தவித்த கால் விரல்களை என்ன செய்வதென்ற புதுக்கவலையுடன் படுக்கையில் தலைசாய்த்து சுவர்த்திரையில் புதிய உச்ச நட்சத்திரங்கள் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் ப்ரதயேக காட்சியை கண்டுகளிக்க தயாரானது கோழி.

"இது என்ன கண்றாவி கதை?" என கோபம் கொண்டு குப்பைத்தொட்டியில் கைபேசியை தூக்கி எறிந்துவிடாதீர்கள். நான் சொல்லப்போவதை ஒரே ஒரு நிமிடம் பொறுமை காத்து கேளுங்கள். பின்னர் தூக்கி எறியுங்கள், எதை வேண்டுமானாலும்.

அந்தக்கோழி நீங்கள்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்