முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போந்தா கோலி


சுரேஷும் நானும் பக்கத்து பக்கத்து லைன் வீடு. பதின்பருவம். ஒரே வயது, வெவ்வேறு பள்ளிகள்.

கோலிக்குண்டு எங்களை நட்பாக்கியது, முட்டிக்கொள்ள வைத்தது, நட்பாக்கியது.

வீட்டுக்கு வெளியே மண் தரை. மழை விழுந்து இறுகி மேலே மணல் படிந்து என கோலி குண்டு விளையாட சரியான பதத்தில்.

பள்ளி முடிந்த நேரங்களில், விடுமுறை தினங்களில் கால் டவுசர் பைகளில் கோலிக்குண்டுகள் சிணுங்க சிணுங்க விளையாடுவோம்.

பதினைந்தடி தூரத்தில் இடமிருந்து வலமாக ஒரு கோடு கிழிப்போம்.

கோட்டிலிருந்து இரண்டு அடிகள் மேலே தள்ளி ஒரு சிறு குழி எடுப்போம், சில கோலிகள் மட்டும் சிக்கும் அளவில்.

கோலி வீரர்கள் வரிசையாய் அணிவகுத்து ஆளுக்கு இத்தனை கோலி (ஒன்றிலிருந்து கைகொள்ளும்வரையிலான அளவில் பந்தயம் கட்டலாம், எல்லா வீரர்களும் ஒரே எண்ணிக்கையில் கட்டவேண்டும் ) என முடிவுசெய்து, சாட் பூட் த்ரீ போட்டு ஓபனிங் அண்ட் ப்ளேயிங் ஆர்டரை முடிவு செய்வோம்.

அந்த வீரரும் குறிப்பிட்ட இடத்திலிருந்து கோடு தாண்டி கோலிகளை வீசுவார்.

குழியில் விழுந்த கோலிகள் அவருக்கே சொந்தம்.

எஞ்சிய கோலிகளில் எதை அடிக்கவேண்டும் என வரிசையில் அடுத்து உள்ள வீரர் முடிவு செய்ய, முதலாம் வீரர் குறிபார்த்து அதை மட்டும் அளவில் பெரிய கோலிக்குண்டு வைத்து (போந்தா கோலி) அடித்தாரென்றால் அத்தனை கோலிகளையும் அவர் வென்றதாக கணக்கு.

அடிக்கவில்லையென்றால் வரிசையில் அடுத்த வீரர் மீதமுள்ள கோலிகளை சேகரித்து தொடக்க இடத்தில் நின்று வீசி தொடர்வார்.

பொழுது கரைவது தெரியாமல், தோல் கருப்பது தெரியாமல் விளையாடிய நாட்கள்...

அவ்வப்போது இடைவேளை எடுத்து அருகில் இருக்கும் பூவரசு மரத்தடியில் பீப்பீ ஊதி அமர்ந்திருப்போம். சுரேஷ்தான் எனக்கு பூவரசம்பூவை சாப்பிடலாம் என அறிவு விளக்கேற்றியவன்.

நிறைய நாட்கள் என் டவுசர் பைகளில் கோலிகள் பிதுங்கி வழியும். வீட்டில் கண்ணாடி பாட்டிலில் இட்டு மூடி வெயில் கிரணங்களில் வைத்து சுற்றி விழும் வண்ண ஜாலத்தில் கிறங்கிப்போகும் மனது...

ஒரு கோடை விடுமுறையில் கிராமத்தில் தாத்தா வீட்டில் மதிய வெயிலில் கிணற்றடி தாழ்வாரத்தில் நொங்கு தின்றுகொண்டே தினமணி நாளிதழில் செய்தி படிக்கையில் ஒரு நாலுவரி செய்தி, 'மன்னார்குடி ####தெருவில் குடியிருந்த குமார் என்கிற 35 வயது ஆண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனும் மனைவியும் விடுமுறைக்கு வெளியூர் சென்றிருக்கையில் இறந்துபோனார்'.

மனதில் ஏதோ ஒரு இழை அறுந்த வலி. 

விடுமுறை முடிந்து ஊர் திரும்பியதும் தேடிய கண்களில் பட்டது அவன் வீட்டுக்கதவில் தொங்கிய பூட்டு...

அழுகையாய் வந்தது. 

எங்கு போனான் என்பதே தெரியாமல் என் இன்றைய தினங்களும் கரைகிறது. 

அதன்பின் ஏனோ கோலிக்குண்டு விளையாடுவதில் ஆர்வமே வரவில்லை.

கோலிக்குண்டு எங்கு கண்ணில் பட்டாலும் ஒரு பரவசம் உள்ளெழும்பி...சுரேஷின் தகப்பனற்ற பதின்பருவ நாட்கள் அந்த கோலிக்குண்டில் மங்கலாய் உள்ளாட மனம் சோகமாவதும் தொடர்கிறது.

ஒரு விதத்தில் நம் அனைவரின் வாழ்வும் யார் கையிலோ உருளும் கோலிக்குண்டுகள்தானே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்