முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அலையாய், துகளாய், இறையாய்...


இறை இருக்கும் இடம் எது? 

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்ற மாதிரி நழுவல்கள் இன்றி, சமரசமின்றி நேர்மையாய் அலசுவோமா?

அந்தரத்தில் ஊஞ்சலாடும் நட்சத்திரக்கூட்டங்களுள் ஒன்றான நம் புவியில் மட்டும் இறை இருக்கிறது என்று கொண்டால் மற்ற நட்சத்திரங்களை காப்பது யார்? அந்த இறை எங்கு உறையும்? இந்த கூற்றை தொடர்ந்து சிந்தித்தால் இறை நம் புவிக்குள் மட்டுமே அடங்கியிருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகும்.

அள்ளித்தெளித்த பல கோடி வைரங்களாய் உலகங்கள் பரவிக்கிடக்கும் பால் வெளிகளில், அவற்றை தழுவிப்போர்த்தியிருக்கும் காரிருளில் இன்னாருக்கு இன்ன இடம், இந்த இடம் மட்டுமே என்ற ஆதார விதிகளை வகுத்த இறை, இவை எல்லாவற்றையும் காக்கும் இறை, இதை விட்டு வெளியிலிருந்து, விலகி இருந்து காக்க வாய்ப்பில்லை.

அப்படியானால் இறை எங்குதான் இருக்கிறது?

எங்குதான் இருக்கிறது இறை?

விடை அறிய, நாம் இன்னொரு வினாவுக்கு விடை தேடவேண்டியிருக்கிறது.

"அறிவியலும் ஆன்மீகமும் இணையும் புள்ளி எது"?

ஆன்மீகம் நம் உள்ளில் இருந்து வெளிப்பட்டு நம் உணர்வுகளின் வழி, சிந்தனையின் வழி அண்டவெளியெங்கும் பரவியோடி, இறை தேடி களைத்துப்போய் நம் உணர்வில் அடங்குவது.

அறிவியல், அண்டவெளியின் எல்லையை தேடி முடிவிலா பெரும்பயணம் தொடங்கி, பயண காலத்தில் பொழுதைப்போக்க, அணுவைப்பிளக்கும் செயல்களையும் நம் உயிர்ப்பிரதிச்சுருள்களை (DNA) நறுக்கித்தைக்கும் வேலையையும் இன்ன பிற ஆய்வுகளையும் செய்து களைத்துப்போய் நம் சிந்தனையில் அடங்குவது.

இவை இரண்டும் (ஆன்மீகமும் அறிவியலும், உணர்வும் சிந்தனையும்) இணையும் புள்ளியாக குவாண்டம் இயற்பியல் முன்வைக்கப்படுகிறது.

'உளதாய் இலதாய்' என ஆன்மீகம் சொன்னதும் 'அலையாய் துகளாய்' என அறிவியல் சொன்னதும் இணையும் புள்ளி 'குவாண்டா' எனப்படும் துகளினும் நுண்ணிய சிறு துகள். இந்த சிறு துகள் அலை வடிவில், துகள் வடிவில் மாறி மாறி மாறி.... ஏனென்று கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்!

நம் உலகில் நிற்பதுவே நடப்பதுவே இருப்பதுவே பறப்பதுவே என நாம் காணும் அனைத்தும், நாமும் குவாண்டா துகள்களால் ஆனவர்கள்!

'ஏன் இப்படி ஆச்சி? இதை விட சிறிய துகள் உண்டா?' என்ற வினாக்களுக்கு விடை தெரியாத அறிவியல், விடையாக இறை இங்கு இருப்பதாக நம்பி நடக்கிறது.

இந்தக்கேள்விகள் எதுவுமே அவசியமற்றவை, எல்லாம் மாயை என ஆன்மீகம் தெளிவாய் அமர்ந்திருக்கிறது.

இந்த இரு நிலைப்பாடுகளையும் அறிதல் நம் தேடுதலை எளிதாக்குகிறது.

இறை இல்லை என எவரும் அறைகூவ இயலாது என்பதும் தெளிவாகிறது!

இந்த தெளிவோடு மேலும் அலசுவோம்.

இந்த அண்டவெளியில் மிக நீண்ட நெடிய சாகசங்கள் நிறைந்த சங்கடங்கள் நிறைந்த பயணம், உணர்வும் எண்ணமும் முரண்கொண்டு நகர்த்தும் பயணம், வேறு கோளங்களில் உயிரினங்களை இருப்பை அறிய மேற்கொள்ளப்படும் பயணங்களோ, அண்டத்தின் எல்லை காண நடத்தப்படும் பயணங்களோ அல்ல. அது இரு உயிரினங்களின் இடையே உள்ள இடைவெளியில் நிகழ்த்தப்படும் பயணம், அணுதினமும் ஒவ்வொரு நொடியும் நிகழும் பயணம், ஒரு உயிர் இன்னொரு உயிரை அறிய, உணர விழையும் பயணம், ஒன்றை ஒன்று நோக்கி நகரும் பயணம். அறிவியல் தோற்பது இங்குதான். அறிவியல் பயணங்களில் இலக்கு என்பது நிலையான அல்லது விலகிச்செல்லும் ஒன்று. தனக்கு ஆதாயம் வேண்டியே இங்கு பயணங்கள் நிகழ்கின்றன.

ஆன்மீகம் தோற்பதும் இங்குதான். இறை அறிய 'தன்னைத்தோண்டி ஞானம் தேடு' என தனக்குள்ளே மூழ்கச்சொல்லி, தனக்குள்ளே மட்டுமே மூழ்கச்சொல்லி.

இரு உயிர்களுக்கு இடையில் உள்ள அளவிடமுயாத இடைவெளியில்தான் இறை அசைந்துகொண்டிருக்கிறது, உயிர்ப்புடன் இருக்கின்றது. உலகங்களை இயக்குகிறது!

இடைவெளி குறையை குறைய இறையிடம் நம்மை நெருக்கமாய் உணர்த்தி நகர்த்தும் இப்பயணத்தில் இறையை நாம் பல வடிவங்களில், உணர்வுகளில் தரிசிக்கலாம்..

தரிசனம் கிட்டும் அந்த தருணங்களில் நம் எண்ணங்கள் அடியோடு நின்றுபோயிருக்கும், உணர்வுகள் மட்டுமே நம்முள் நிறைந்திருக்கும்!

மனிதர்களின் வழி விளக்கினால் புரிதல் எளிதாகும்.

இரு மனிதர்கள் ஒருவரை நோக்கி ஒருவர் பயணம் செய்யச்செய்ய இறையின் இடைவெளி குறைந்து, ஒரு புள்ளியில் இருவரும் ஒன்றாக உணரும்போது இருவரும் இறையாக மாறிப்போகும் அற்புதம் நிகழும்.

ஒன்றான இரண்டு (மனிதர்கள்) இன்னுமொரு மனிதரை உணர பயணம் செய்தால் மூன்று ஒன்றாகும், நான்கு ஒன்றாகும், கோடானு கோடியும் ஒன்றாகும். அங்கு இறை உள் உறையும்.

அகம் ப்ரம்மாஸ்மி என்பதும் அதுவே, தத்வமசி என்பதும் அதுவே. அலையும் அதுவே, துகளும் அதுவே.

சற்றே கண்களை மூடி உணர்வுகளை கேட்போம், கடைசியாய் எப்பொழுது இறையின் இருப்பை உணர்ந்தோமென்று...

பயணிப்போம், அலையாய், துகளாய்....




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்