முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எக்சாம்!


அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, பேய்கள் கூத்தாடும் மதிய நேரம்.

அடுத்தநாள் காலையில் கெமிஸ்ட்ரி தேர்வு, +2, பப்ளிக் தேர்வு.

என் பள்ளி மைதானத்தில் நானும் நண்பனும் சீரியசாய் கிரிக்கெட் விளையாட்டில்; படிக்கிறதுக்கு இடையில ப்ரேக்!

மைதானத்தில் சுற்றிக்கொண்டிருந்த அரை டவுசர்களை பிடித்து ரெண்டு டீம் சேர்த்து, உலகக்கோப்பை இறுதிப்போட்டி போல ஆக்ரோஷமான மோதல்; கார்க் பால் கிரிக்கெட்.

ரவுசு தாங்காமல் வேடிக்கை பார்க்க மேலும் சில அரை டவுசர்கள்; பௌண்டரி தாண்டி போகும் பந்தை பொறுக்கிப்போட்டால் அடுத்த மேட்சில் சேத்துக்குவோம் என :-)

மேட்சின் திருப்பு முனை; நான் மெல்ல ஓடி வந்து லெக் ஸ்பின் போட, பந்து திரும்பிக்கூட பார்க்காமல் நேரே...நேரே செல்ல, மட்டையாளன், என் நண்பன், வலு கூட்டி சுழற்ற, பந்து தரையில் படாமல் பவுண்டரி நோக்கி பறக்க...சிக்சர் என அம்பயர் பொடியன் என் முறைப்பையும் தாண்டி கரங்கள் உயர்த்த... அது நிகழ்ந்தது!

'அம்மாஆஆஆஆஆஆ!' என்ற அலறல்.

பவுண்டரிக்கு வெளியே பாண்டியாடிக்கொண்டிருந்த ஒரு பொடியனின் தலையிலிருந்து ரத்தம்... கொட்டுகிறது! பந்தளவு தலையில் வீக்கம்!

அடுத்த நொடியின் 24 இல் 22 காணாமல் போக, களத்தில் எஞ்சியிருந்தது நானும் நண்பனும் மட்டுமே!

திக் திக் இதயத்தோடு ரத்தக்கட்டு ஒன்று துணியை கிழித்துப்போட்டு, சைக்கிளில் பொடியனை குத்துமதிப்பாய் அமர்த்தி, ட்ரிப்பிள்ஸ் சலோ, டாக்டர் க்ளினிக்குக்கு. 

ஆர்கானிக், இனார்கானிக் கெமிஸ்ட்ரி எல்லாம் ரத்தத்தில் கறைந்து போய், பயத்தில் உறைந்துபோய், டாக்டர் முன் நாங்கள் மூவரும்.

பெரிய காயம் ஒண்ணும் இல்லடா பொறுப்பில்லாத பசங்களா என்ற டாக்டரின் ஏச்சை துடைத்துப்போட்டு, அவர் கேட்ட ஃபீசை கொடுத்து ('சார் சார், ஸ்டூடன்ட்ஸ் சார், டிஸ்கவுண்ட் சார்???') வெளியே வந்தோம் பொடியனுடன்.

'அந்த டாக்டருக்கு என்னா தெனாவெட்டு! ஏதாவது பண்ணனும்ப்பா' என பரபரத்த நண்பனின் ஐடியா, டாக்டருக்கு லேண்ட் லைனில் போன் போட்டு, 'போடா வெண்ண!' என்ற பஞ்ச் டயலாக்  மட்டும் பேசி, வைத்துவிடுவது (அநியாய ஃபீசை அவந்தான கட்டுனான்!).

அடக்கி, சமாதானப்படுத்தி, வயிற்றில் புளி கரைய நாங்கள் சைக்கிள் மிதித்தது, அந்தப்பொடியன் தந்த அட்ரசுக்கு.

குறுகலான சந்தில் வீடு.

'அடிச்சாங்கன்னா தப்பிச்சி ஓடக்கூட வழியில்லையே' என மௌனமாய் திகில் பார்வை பரிமாறிக்கொண்டு, இறங்கினோம், இறக்கினோம்.

'ஐயையோ என்னாச்சி!!!!!' என பதறி ஓடி வந்தார் அவனது அன்னை.

உதை நிச்சயம்டோய் என ஓடத்தயாராக எதிர் திசையில் ஒரு கால் பதித்து நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஈனஸ்வரத்தில், 'கிரிக்கெட்டு...க்ரவுண்டு...குறுக்க வந்துட்டப்புல...' என முனகி முடிப்பதற்குள்...சரமாறி அடி!

'ஐயோ அம்மா அடிக்காத!!!!' என பொடியன் அழும்போதுதான் உணர்ந்தோம் அடி எங்களுக்கில்லை என!

'விளையாடுற எடத்துக்கு போகாதன்னு படிச்சி படிச்சி சொன்னேனேடா! கேட்டிருந்தா இப்படி ஆயிருக்குமா??' என அவர் மேலும் கும்ம, ஜீர வேகத்தில் சைக்கிளில் ஏறிப்பறந்தோம் வீட்டுக்கு.

பின்னாளில், 'கெமிஸ்ட்ரி மாதிரி ஒரு டஃப் சப்ஜெக்ட்ல எப்படிடா இவ்ளோ மார்க்கு!!!' என பலர் வியந்து கேட்டபோதும் அதன் ரகசியத்தை நான் சொல்லவே இல்லையே!

Take away:

1. என் ஜெனரேஷனில் இன்றுபோல மார்க்குகளை துரத்தும் அழுத்தம் அறவே இல்லை.

2. எனக்கு அப்படி ஒன்றும் வயதாகவில்லை :-)

3. இன்று இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் சூப்பர் அக்ரெசிவ் பேரண்டுகள் எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் நடையாய் நடக்கவைத்திருப்பார்கள் :-)

4. அன்று லேண்ட்லைனில் டாக்டரிடம் பஞ்ச் டயலாக் பேசத்துடித்தவன், சிங்கையில் ஒரு பெரு நிறுவனத்தில் சீன, மலாய், ப்ரிட்டிஷ், அமெரிக்க பணியாளர்களுடன் கார்பரேட் மீட்டிங்குகளில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறான், இன்றும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...