முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆடையில்லாத தீபாவளி!


ஆடையில்லா தீபாவளி!

ஒரு மாதம் முன்னையே குதூகலம்.

பள்ளியிலிருந்து வந்தவுடன் அப்பாவின் கை பிடித்து துள்ளல் நடையில் கடைக்கு போய் மொரமொரப்பான வாசனையான துணிகளை ஆசையுடன் தடவிப்பார்த்து நீலமும் வெள்ளையும் ஊடாடும் (அதாங்க check டிசைனு!) சட்டைத்துணியும் கரும்பச்சை அரைக்கால் டவுசர் துணியும் அளந்து கிழிச்சாச்சு.

டெய்லர் கடைக்கு போகையில் துள்ளல் அதிகமாச்சு. மனக்கண்ணாடியில் விதம் விதமாய் போஸ் கொடுத்துக்கொண்டே நடந்தேன்.

'கொஞ்சம் லூசா தைங்க டெய்லரே, வளர்ற பையன்' அப்பா வாஞ்சையோடு சொல்ல டெய்லர் அளவெடுத்தார். அதென்னவோ தெரியாது, இடுப்பை சுத்தி அளவெடுக்கையில் கிச்சு கிச்சு மூட்டின மாதிரி ஒரு நெளி :-)

கிளம்புகையில் முத்தாய்ப்பாய் அப்பா சொன்னார், 'இடுப்பும் கொஞ்சம் லூசா, நாடா (suspender) வச்சி தச்சிருங்க, கழலாம தோள்பட்டைல நிக்கும்'.

மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், ரயில்வெடி, பாம்பு மாத்திரை, ரோல் கேப்பு, துப்பாக்கி, ராக்கெட் இத்யாதி, ஒரு நீநீநீநீள ஊதுபத்தி :-)

பையை ஆனந்தமாய் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தால் அடுப்படியிலிருந்து தேன்குழல் வாசம்!  பண்டிகை தினங்களை உற்சாகமாக ஊரே கொண்டாடும் சூழலில் கால்கள் பஞ்சுப்பொதிகளாய் மாற, என் வயதினர் அனைவரும் குதிநடைதான்!

'ட்ரஸ் எப்போப்பா வரும்?' என நான் காலையில் கேட்கும் தினங்களில் எல்லாம் அப்பா தவறாமல் மாலையில் டெய்லரை பார்ப்பார்.

ஊரான ஊருக்குள்ள ஒரே ஒரு டெய்லர் என்ற ரேஞ்சில் மலைபோல குவிந்திருக்கும் வெட்டுண்ட துணிகளுக்கிடையிலிருந்து டெய்லரின் குரல் மட்டும் கேட்கும், 'அப்பறமா வாங்க, ரெடியாயிடும்'.

தீபாவளிக்கு முந்தைய இரவு அப்பா வேலை முடித்து வீடு வந்தபோது சோர்வாக இருப்பதாக பட்டது. 'அப்பா, ட்ரஸ் வந்திடுச்சா?' என்றேன். 

'டெய்லர் கடைல நெருப்பு புடிச்சிடுச்சாம்டா, துணியெல்லாம் எரிஞ்சி போய்டுச்சாம்...' என்று அம்மா சன்னமாக சொன்னார்.

அப்போதெல்லாம் எங்கள் ஊரில் ரெடிமேட் ஆடைகள் கிடையாது. துணி எடுத்துதான் தைப்போம்...

அந்த தீபாவளி புத்தாடையின்றி கழிந்தது. ஆனாலும் தீபங்களின் ஒளியிலோ, பட்டாசுகளின் அதிர்விலோ, பலகாரங்களின் இனிப்பு, காரத்திலோ குறையொன்றுமில்லை!

ஆடை கிடைக்காத ஏக்கம் சில நொடிகள் இருந்திருக்கலாம். என் சோகம் என் பெற்றோருக்கு தந்த வருத்தம் அதை உடனே மாற்றியிருக்கலாம். ஆனால் அன்று இரவும் மிக மகிழ்வோடு தேன்குழலும் முள்ளு முறுக்கும் உண்டு உறங்கியது நினைவிலிருக்கிறது.

அதன்பின் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் இது மட்டும் நினைவிலிருந்து அகலவில்லை.

இன்றைய பெருநுகர் உலகில் 'காத்திருத்தல்' என்றால் என்ன என்றே அறியாத தலைமுறைக்கு இந்தப்பதிவு புரியாமல் போகலாம். ஆனால் எனக்குப்புரிந்த ஒன்று, இன்றைய பண்டிகைகளில் அன்றைய மகிழ்வு இல்லை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்