முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகெங்கும் உள்ள கோடானு கோடி ரசிகர்களின் மனத்திரையில் 25 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரே படம்!


உலகெங்கும் உள்ள கோடானு கோடி ரசிகர்களின் மனத்திரையில் 25 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரே படம்!

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்...

நினைவு தெரிந்த நாள் முதலே சினிமா என்னை வசீகரித்தது.

கிருஸ்தவ பள்ளியில் மதிய நேரம் வெள்ளித்திரை கட்டி ஸ்வாதி நட்சத்திரம் காட்டினார்கள். இன்னொருமுறை முத்துராமன், 'ஆனந்தமானது, அற்புதமானது, நானந்த மருந்தை கண்டுகொண்டேன்' என்றார்.

பின்னொரு நாளில், 'மான்களும் சொந்தம் தேடையில் இந்த மானிடன் செய்த பாவம் என்னவோ!' என சிவாஜி ஏசுவிடம் மன்றாடினார்.

சற்றே பெரிய பையனானபின் சிவாஜி தருமியைப்பார்த்து உறுமியது முதல் 'தூங்காத கண்ணென்று ஒன்று' வரை தொடர்ந்து பின் பாலசந்தர், நாகேஷ், ஜெய்சங்கர், கர்ணன் என வளர்ந்தது (கர்ணன், ஹாலிவுட் கௌபாய்சையே மெரட்டியவர், கேமரா ஆங்கிளிலும் ஹாலிவுட்டை மிஞ்சிய க்ளோஸ் அப்கள், அது ஹீரோ முகமாகவும் இருக்கலாம், ஹீரோயின் "     " ஆகவும் இருக்கலாம்! நாயகிகளை 'தாராளமாய்' காட்ட அவரது சென்சார் போர்டு மெம்பர் பதவி உதவிற்று. வீட்டில் பொய் சொல்லி இவரது ஜம்பு படம் பார்த்த என் தோழர்கள் அனைவர்க்கும் சில தினங்கள் காய்ச்சல்!!!).

இடையில் சிவராத்திரி / சொர்க்கவாசல் திறக்கும் நாளின் முந்தைய இரவொன்றில் அபிராமியின் அணிகலன் வானில் பௌர்ணமியான படம், அநீதியை அம்மன் / காளி / மகமாயி வெல்லும் படம் என கண்முழித்து தியேட்டரில் பார்த்து சாமியாடியபடி வீடு வந்தால் அப்பா ஆடிய சாமியாட்டத்தில் அம்மாவுக்கு அருள் வந்திடுச்சி, "யாரக்கேட்டு அவன ராத்திரி பூரா வெளில சுத்தவிட்ட???"!

அம்மாவின் அரவணைப்பின் பின் ஒளிந்துகொண்டு அப்பாவின் பேரன்பை ரசித்த விலைமதிப்பற்ற தருணம் தந்த சினிமா வாழ்க!

பொதுவாக என் மனசு தங்கம் என ஒரு காளையனை கண்டபோதே சப்பாணியையும் கண்டு, இருவருக்கும் ரசிகனான அபூர்வ சிலரில் நானும் ஒருவன் (பரட்டை, காளையனானபின்தான் ஈர்த்தார் :-)

பதின் வயதில் மக்கள் என் பக்கம் என்ற மெகா ஹிட் சத்யராஜ் மல்டி ஸ்டாரருக்கு ஆண்கள் கூட்டம் அலைமோத, நானும் என் உறவு சகாக்களும் பெண்கள் க்யூவில் முண்டி நின்றதை இன்னொரு உறவு எங்கள் வீட்டில் காறித்துப்ப மானம் கப்பலேறியதாய் நொந்து திரிந்தோம் சில காலம். இன்று உறவுகள் யாராவது, 'லேடீஸ் கவுண்டர்ல முண்டியடிச்சி டிக்கட் வாங்குன பயதானடே நீ!' என என் குழந்தைகள் மத்தியில் கேலி செய்கையில் மனம் குதூகலிக்கிறது...

படிப்படியாய் திரைப்படங்களோடு வளர, அநேகமாய் எல்லா ஹீரோக்களையும் பிடித்துப்போயிற்று; நல்லவன் வெல்வான் என்ற கற்பிதத்தால்கூட இருக்கலாம் :-)

கமலஹாசன் தன் வித்தியாச நடிப்பால், ரஜினி தன் ஒரே மாதிரியான நடிப்பால், இருவரையும் ஸ்பெஷலாய் ஒரு பிடி கூடுதலாய் பிடித்துப்போனது.

கோடை விடுமுறைக்கு கிராமத்து வீட்டிலே குஞ்சு குளுவானெல்லாம் சந்தோஷமாக ஆடிக்கொண்டிருக்கையிலே, விடுமுறைக்கு ஒரு விசேஷமாவது வீட்டில் கண்டிப்பாக நடக்கும். மூன்று கட்டு வீட்டில் நாங்களெல்லோரும் நிறஞ்சுகிடக்க, கையில் குச்சியோடு சில மாமாக்கள் / அத்தைகள் / சித்தப்புகளின் கடுங்காவல் வளையத்துக்குள் கொல்லையில் விறகடுப்பு மூட்டி லட்டுகளும் ஜாங்கிரிகளும் ரெடியாகும். மோப்பம் பிடித்து ஒரு தற்கொலைப்படையும் ஒரு காரியசித்தி படையும் கிளம்பும். தற்கொலை படை கடுங்காவல் வளையத்தில் தானாகவே சிக்கி டைவர்சன் க்ரியேட் பண்ணும் சில நிமிட கேப்பில் ஏராளமான லட்டுகளும் ஜாங்கிரிகளும் அடுக்கின தட்டுகளிலிருந்து களவாடப்படும். வெற்றிக்களிப்பில் ஓவராய் தின்று சில மணி நேரத்துக்குள் "வயிறு வலிக்குது" என சில பக்கிகள் கதற, கிராமத்து டாக்டரை மருந்து புட்டிகளோடு கடத்திவர ஆள் அம்பு பறக்கும்.

வயிற்று வலிதாளாது சில பக்கிகள் 'என்னத்த தின்ன? மரியாதயா சொல்லிடு! இல்லாட்டி உம்மாச்சி கண்ண நோண்டிடும்!' என்ற மிரட்டல் ப்ளஸ் நங்குன்னு ஒரு கொட்டு வாங்கியபின்  வாக்குமூலம் கொடுக்க, காரியசித்தி படைக்கும் பேரேடு நடக்கும்!

'அடங்க மாட்றாங்க இவனுங்க!' என கடுங்காவல் படை தலை சொறிய, ஐடியா அண்ணாசாமி உறவு ஒன்று ஆபத்பாந்தவராய் குரல் கொடுக்கும்; 'பேசாம டென்ட்டு கொட்டாய்க்கு முதலாட்டத்துக்கு அனுப்பிறலாம்... வேல இங்கண நிறைய கெடக்கு....இவனுங்கள மேய்க்கிறதுக்கு...நானும் போறேன்!' என :-)

தரை டிக்கட்டு, சேர் டிக்கட்டு என்ற இரண்டே வகுப்புகள் கொண்ட கொட்டாயில் சேர் டிக்கட்டுகளையெல்லாம் பெண்டு பிள்ளைகள் ஆக்கிரமிக்க, கோபத்தில் கொதிக்கும் பசங்களை இன்டர்வல்ல தேன் மிட்டாய் என்பதாய் கங்காணி உறவு தாஜா செய்ய, வீரர்கள் மண் தரையில் அணிவகுப்போம் (லைட் வெளிச்சம் இருக்கும்போதே எடம் புடிச்சிடணும்; அப்பதான் மண் தரையில வெற்றிலைச்சாறு கரை இல்லாத இடமா புடிக்கலாம்).

இப்படி ஒரு மாலை நாங்கள் பார்க்கச்சென்ற படம் ஜெகன்மோகினி! பேய் பிசாசெல்லாம் காலை நீட்டி விறகாக எரித்து சமையல் செய்ய எவ்களுக்கு ஈரக்கொலையெல்லாம் நடுங்கிப்போச். படம் முடித்து வீட்டுக்கு போய் வயிறு முட்ட தயிர்சாதமும் தேங்காய் துகையலும் உண்டு ஒரு சொம்பு தண்ணி குடித்து, படுத்தால்... பாதி இரவில் ஒண்ணுக்கு முட்டி முழிப்பு வர, சொந்த பந்தமெல்லாம் குறட்டையிட்டு தூங்க, திரையில் அடுப்பெரித்த பேய்களெல்லாம் எங்கள் மனக்கதவை பிராண்ட, திண்ணைக்கு பத்தடி வெளியில் இருக்கும் வேலியருகில் ஒண்ணுக்கடிக்க தைரியமின்றி கட்டாந்தரை படுக்கையிலேயே நெளிந்துகொண்டிருந்தோம், கோழி கூவி முதல் ஆள் எழுந்திருக்கும் வரை!

'என்ன ஆச்சு இவனுங்களுக்கு?! அம்புட்டு பயலும் இவ்ளோ காலங்காத்தால போர்வைய கூட மடிக்காம இந்த ஓட்டம் ஓடுறானுங்க!!!!' என அங்கலாய்த்து நகரும் அந்த சித்தப்புக்கு தெரியுமா எங்கள் வேதனை!!!!!

தாய்மாமா ஒருவர் எங்கள் டவுன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஆங்கிலப்படத்துக்கு அழைத்துச்செல்வார்; பொதுவாக ப்ரம்மாண்ட காட்சியமைப்பு, லொகேஷன் மற்றும் பெண்களுக்காகவே ஓடிய படங்களுக்கு :-)

இடையில் 'தீ' மாதிரி சிவந்த கண்களுடன் விஜய்காந்த் என்ட்டராக, அவர் படங்களையும் பார்த்தோம், அந்த நிகழ்வு நிகழும் வரை;
"
அதாகப்பட்டது, தம்பி தங்கக்கம்பி என்ற படத்தில் இவர் நடிச்சாரா, அதப்பாக்க நாங்க போனமா, டிக்கட்டு வாங்க ஜென்ஸ் க்யூவில நின்னமா, முந்தின ஷோ முடிஞ்சு கொஞ்சமே கொஞ்சம் பேரு கண்ணெல்லாம் செவந்து வெளில வந்தாங்களா, வந்தவங்க எங்கள பாத்ததும் ப்ரீஸ் ஆயி நின்னாங்களா, 'என்னன்னே படம் எப்புடி?' ங்கிற மாதிரி நாங்க லுக்கு வுட, அதுல ஒருத்தன் பக்கத்தில தொங்கின வேப்ப மரக்கிளைல ஒரு குச்சிய ஒடிச்சி... வச்சாம்பாருங்க ஒரு அடி!

'எவனாவது இந்தப்படத்தப்போயி பாக்கலாமுன்னு தியேட்டர் பக்கம் வந்தீங்க, டங்குவார அத்துருவேன்! ஓடிடுங்க!!!' ன்னான்.

சிட்டா ஓடிட்டோம். அடுத்த வாரம் ஆனந்த விகடன்ல விமர்சனம் படிச்சதக்குப்பறம்தான் புரிஞ்சது பாவிப்பய ஒரே அடியில எங்கள எவ்ளோ பெரிய ஆபத்திலந்து காப்பாத்திருக்கான்னு!!!
"
வயது வந்த பின் வயதைக்கெடுக்கும் படங்கள், தொலைதூர தியேட்டரில் என நம்ம நடவடிக்கை அப்பப்போ மாறிப்போனாலும் சினிமாவின் ஈர்ப்பு பெருகிக்கொண்டுதான் இருந்தது.

அதன் பின் டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் இன்று நம் உள்ளங்கையில், நாளை நேரடியாக நம் விழித்திரையில் என சினிமா சுருங்கிப்போக, இந்த மாற்றங்களின் ஊடாக வாழ்ந்த என் தலைமுறைக்கு மட்டும் எங்கள் சினிமா அனுபவங்கள் நினைவுச்சுரங்கமாய், இதழோர புன்னகையாய், உறவுகளோடு /சகாக்களோடு உரையாடுகையில் வெடிச்சிரிப்பாய்... தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்