முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜென்சி பிசாசு!!!!


நான் பாட்டுக்கு பள்ளிக்கூடம் போனமா, விளையாண்டமா, வீட்டுக்கு வந்தமா, படிச்சமான்னு (மெய்யாலுமே அப்டிதான்!) சிவனேன்னு சுத்திகிட்டிருந்தேன். ரேடியோ கூட கிரிக்கெட் கமென்ட்டரிக்கு மட்டும்தான்.

திடீர்னு ஒரு நாள், சேனல் கரகரன்னு மொணகவும் வேற ஸ்டேஷன் ட்யூன் பண்ணலாம்னு திருப்புனா, அன்னைக்கு புடிச்சது இந்தப்பிசாசு.

தெய்வீக ராகம், தெவிட்டாத பாடல்னு ஒரு குரல். 

எப்படி உள்ளே எறங்கிச்சின்னே தெரில இன்னைய வரைக்கும் உச்சிய புடிச்சி உலுப்புது!

அப்படி ஒன்னும் perfect ஆன குரலும் கிடையாது, வல்லின மெல்லின உச்சரிப்பு சிக்கலும் கூட (இவரோட 'ர', பெரிய 'ர' ஆனா 'ற' இல்ல!, உடுங்க பாசு, இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணா புரியாது, அனுபவிச்சி கேக்கணும்!)

டேப் ரெகார்டரெல்லாம் அப்ப wish list ல கூட இல்லைங்க... உங்களுக்கு நம்புறதுக்கு கூட கஷ்டமா இருக்கலாம்... அப்பல்லாம் wish list ஏ இல்லைங்க!!!! அந்த மாதிரியான ஒரு இளவட்ட கூட்டம் வாழ்ந்த காலம்!

அப்பலேந்து மார்க்கோனி கணக்கா ரேடியோவ திருகி திருகி, பிசாச தேடி, ரேடியோ knob கழண்டாலும் விடுறதில்ல!

யாருன்னு தெரியாது, ஊரேது தெரியாது ஆனாலும் அந்தக்குரல், அந்தக்குரல்! 

எங்கள் மண்ணின் மாயவித்தைக்காரர் தன் பறக்கும் கம்பளத்தில் இவரை ஏற்றிக்கொள்ள, வரிசையாய் அற்புதமான பாடல்கள், அற்புதமான இசையில்! ஒரு நிலப்பரப்பு மொத்தத்தையும் சடுதியில் பிடித்துக்கொண்டது இந்தப்பிசாசு!



ஒரு இனிய மனது இசையை அழைத்துச்சென்றபோது அந்த கதையின் நாயகி, அவளும் பாடகி, எவ்வளவு மென்மையான மனதுடையவள் என்பதை, இந்த பிசாசுக்குரல் இம்மி பிசகாமல் நம்முள் கடத்தியது.

மீன்கொடி தேரில் நம்மை ஏற்றி இளம் காதலர்களின் மையலை கேட்பவருள் இவர் கடத்த, 'ஜிவ்' வாகி கம்பளத்தின் நுனிகளைப்பிடித்துக்கொண்டே பறந்தன பல லட்சம் இதயங்கள்.

ஞான் ஞான் பாடணும் என வலம் வந்த இந்தப்பிசாசுக்கு வேப்பி்லையடித்து (சினிமா பொழப்பு நிரந்தரமல்ல, அரசு உத்யோகமே சிறப்பு!) பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக்கி அழகு பார்த்தது வாழ்வு. அவருக்கு அதில் ஒன்றும் பெரிய வருத்தம் இல்லை என்று பின்னாளில் ஒரு  உரையாடலில் கூறியிருந்தார்.

அவர் குரல் வழி பயின்ற பிள்ளைகள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

பிசாசின் துரத்தலென்னவோ இன்றுவரை தொடர்ந்து வருகிறது, துரத்த மனமில்லை, துரத்த எண்ணமுமில்லை. ஏனெனில், இவரது பாடல், தெய்வீக ராகம்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...