முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரம், இன்று விதையானது...


சேந்தன்குடிக்காட்டில் இன்று விதையாய் - மரம் தங்கசாமி...

ஐந்து ஆண்டுகள் முன் என் பால்ய தோழன், உறவினன் வீட்டுக்கு (பெருமகளூர், பேராவூரணி அருகில், பேராவூரணி, பட்டுக்கோட்டை அருகில், பட்டுக்கோட்டை, தஞ்சை அருகில்) சென்றபோது, 'இன்று நேரமி்ருந்தால் சேந்தன்குடி போகலாமா?' என்றான்.

'அங்க மரம் தங்கசாமின்னு ஒருத்தர், மரங்கள உயிராய், சாமியாய் கொண்டாடுபவர். போலாமா?' 

மரங்கள் மீதான என் பேரன்பை உணர்ந்தவன், அழைக்கிறான். நானும் என் அண்ணனும் அவனுடன் கிளம்பினோம்.

ம.தங்கசாமியின் மகன் எங்களை ஒரு சாலைப்பிரிவில் சந்தித்து தோட்டத்துக்கு (வனத்துக்கு!) அழைத்துச்சென்றார்.

வயதான மனிதர் (அப்போது 76 வயதாம்), பார்வை துல்லியம், நடையில் தளர்வில்லை, எதிர்கொண்டு வரவேற்றார். 

'ஒங்க குலசாமிய கும்பிட்டுக்குங்க' என்று அங்கு ஒரு சுவரை காட்டினார். அதில் ஆள் உயர நிலைக்கண்ணாடி மட்டுமே! அதில் தெரிந்த எங்கள் பிரதியை வணங்கி உள்ளே சென்றால், எங்களை உள்வாங்கிக்கொண்டது வனம்! 

நெடிதுயர்ந்த பலா, வேம்பு, மா, சந்தனம், வேங்கை, இன்னும் பல வகை மரங்கள், எலுமிச்சை, கொய்யா, பலப்பல பழ மரங்கள், தரையெங்கும் மூலிகைச்செடிகள்...

பரவச உணர்வுடன் சுற்றி சுற்றிப்பார்த்தோம், கண்கொள்ளுமட்டும்!

மாம்பழம் ஒன்றை அவர் மகன் மரத்திலிருந்து பறித்துத்தந்தார். அற்புதமான சுவை, என் வாழ்நாளில் கண்டிராத சுவை... விதையின் மேலோடு கூட விடாமல் கரண்டித்தின்றேன்!

சுற்றி சுற்றி வருகையில் இருட்டியதால் மட்டுமே அங்கிருந்து நகர்ந்தோம். அவரது  வீட்டுக்குள் அவரெதிரில் ஒரு பலகையில் அமர்ந்து உரையாடினோம், மரங்களின் அவசியம் பற்றி, அவற்றோடு இணைந்த அவரது வாழ்வுப்பயணம் பற்றி...

'கல்யாணமா, பிள்ள பொறந்ததா, காது குத்தா, சடங்கா, கருமாதியா, மரம் நடு !.

காசு வேணுங்கும்போது வெட்டிக்கோ. ஆடு வளருப்பா, அது நடமாடும் வங்கி !'

இவற்றை இவர் சொல்லவில்லை, வாழ்ந்து காண்பித்தார் !

ஏராளமான சந்தன மரங்களையும் செம்மரங்களையும் எம் நிலங்களில் நடச்சொன்னார். அரசின் 'தடை செய்யப்பட்ட மரங்கள் பட்டியல்' பற்றி சொன்னோம். சன்னதம் வத்ததுபோல் பேசினார், 'என்னோட நிலத்தில நான் என்ன மரம் நடலாம், என்ன மரம் நடக்கூடாருன்னு சொல்ல வேறு யாருக்கும் உரிமையில்லை. சந்தனத்துக்கும் செம்மரத்துக்கும் சந்தை மதிப்பு நல்லா இருக்கிறப்ப அதை நட்டு வளர்ப்பதுதானே நியாயம்? அரசு புறம்போக்கு நிலங்களில் ஏற்கனவே இவற்றை வளத்தா அதுக்காக நாம யாரும் வளக்கக்கூடாதுன்னு சொல்றத நான் ஒத்துக்க மாட்டேன். நீங்களும் ஒத்துக்கக்கூடாது!' என்றார். 

'சரி ஐயா, கிளம்புகிறோம், உங்கள் கையால் ஏதாவதொரு விதை கொடுங்கள்' என்றேன். 

மூடிய விரல்களை வி்ரித்து என் உள்ளங்கையில் உதிர்த்தார், ஒற்றை சந்தன மர விதை! எப்போது அது அவர் கையில் வந்தது என்று இன்று வரை எனக்கு புரியவில்லை!

'கிளம்புறதுக்கு முந்தி இதுகள நட்டுட்டு போங்க' என்று சில வேம்பு கன்றுகளை காட்டினார். அவரோடு இணைந்து நட்டோம்.

அருகில் நாற்பது அடி உயர்ந்த வேம்பு ஒன்றை வாஞ்சையோடு தடவி, சொன்னார் '1984 ல நட்டது. இந்திரா இறந்தப்ப...'. அருகில் பல பெருந்தலைவர்கள் பெரு மரங்களாய் நிற்பதை அப்போதுதான் கவனித்தோம்!

இன்று அவரும் ஒரு விதையாகிவிட்டார். நாளை அவரது தோட்டத்தில் ஒரு பெரு மரமாய்... ஏன் இந்த குறுகிய சிந்தனை?!... உலகின் அனைத்து மரங்களிலும் அவரது ஆன்மாவின் சிறு துளி ஒன்று இருக்கும்!


இவரளவு மரங்களை நேசித்த மனிதரை நான் என் வாழ்நாளில் என்று காண்பேனோ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...