முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நழுவும் மொழி - இவர் யாரென்று தெரிகிறதா!


"
அந்தியிறங்கி ஒருவருக்கொருவர் முகம் மறையுமளவிற்கு அறையிருண்டு விட்டது. விளக்கைப் போடத் தோன்றவில்லை. பேசிக் கொண்டிருந்தோம். இருள் அடர அடர அது படிப்படியாக எங்கள் பேச்சைத்தான் சுழற்றிக் கொண்டது. எப்போது மௌனமானோம? ஏதோ ஒரு உள் நிறைவின் பொங்கலில் எங்களைப் பூரா வியாபித்துக் கொண்ட இருளின் இதவில் ஒரு சின்ன சம்புடத்தில் உருளும் இரு ஜின்டான் மாத்திரைகள் போல. ஒரே கோசத்தில் இரண்டு உயிர்த்தாதுக்கள் போல. கூடில் இரு குஞ்சுகள் போல் எங்கள் உள்ளங்களின் நெருக்கத்தில் ஒரு தனிக் கதகதப்பில் அது தந்த மகுதான்மத்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தோம். இந்நிலை எங்கள் நட்பின் தன்மையால் அல்ல. இது அந்த சமயத்தின் மஹிமை.

சிருட்டியின் ஆயாத நூற்பில் இரண்டு இழைகளாக இழைந்து போய்விட்டோம். அல்லது அது தன் கோலத்தில எங்களை இழைத்துவிட்டது என்று சொல்லட்டுமா?
"

1984 ஆம் ஆண்டு.

கோடை விடுமுறை.

கிராமத்து வீடு.

மதியம் வரும் ஒற்றை நாளிதழ், தினமணி.

ஞாயிறானால் மகிழ்வாக தயாராவோம்; தினமணியில் 'கதிர்' வரும் நாள்.

பதின்ம வயதில் அந்த ஞாயிறு இதழின் சில பக்கங்களை, சக வயது உறவுகளுக்கு முன்பு 'கிழித்துச்சென்று' வாசிக்கும் அளவுக்கு என் கால்களை நனைத்த, என்னை மூழ்கடித்த (எழுத்து) நதி, சிந்தாநதி!

சொல்லிப்பார்க்கையி்லேயே ஒரு விசித்திரம் பிடிபடும். 'இது நதியின் பெயர்... இல்லையல்லை, பெயரற்ற 'சிந்தாத நதி'... இல்லையில்லை, இது வேறு எதுவோ' என விசித்திரம் மீண்டும் விசித்திரமாகும்.

'சிந்தாநதி ஓட்டத்தில் துள்ளு மீன்' என்ற கடைசி வரி படிக்கையில் அந்த சிறு மனதிலும் மீன் உதறிய நீர்த்திவலையின் சாரல் தெரிக்கும். அப்பொழுது எனக்கு இவர் யாரென்று தெரியாது.

இன்னொரு வார சிந்தாநதியில் பீரோவில் அம்மா தன்னிடமிருந்து பெற்ற பணத்தை வைத்ததாக நினைவில் பிள்ளை அதை கேட்க, அம்மா இல்லையே எனவும் பொய் சொல்லாதேம்மா என்பான். அந்த சொல் கேட்டதுமே மரித்துப்போவாள் அம்மா. (சிந்தாநதியில் ஒரு கூழாங்கல் என்று கடைசி வரி... என்று தினைக்கிறேன்). 'சொல்லுக்கு இவ்வளவு சக்தியா, எழுத்துக்கு இவ்வளவு சக்தியா?!' என அதிர்ந்த அந்த நாளிலும் எனக்கு இவர் யாரென்று தெரியாது.

பின்னர் உள்ளூர் நூலகத்தில் தேடித்தேடி படித்தாலும் பலது புரியவில்லை என ஒதுங்கியபோதும் எனக்கு இவர் யாரென்று தெரியாது.

சில வருடங்களுக்கு முன் 'ஜன்னல்' என்ற நூலில் இவருடைய நேர்முகம் படிக்கையில் ஆங்கிலமும் தமிழும் சரளமாட ஒரு வசீகரமான எழுத்தாளர் என்ற எண்ணம் தோன்றியது.

அதற்கு முன்னரே அவரது சில நாவல்கள் 'த்வனி, புத்ர' போன்றவை பிரமிப்பு தந்திருந்தன. 'கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனி' இவருக்கு கேட்பதை 'எல் எஸ் டி' ரகம் என வாத்யார் (சுஜாதா) எழுதியிருந்தாலும் வியப்பு குறையவில்லை. அந்த வரிகளை படிக்கும்வரை அப்படியான ஓசை ஒன்றை என்னால் கற்பனைகூட செய்திருக்கமுடியாது. 

யாருடைய பரிந்துரையுமின்றி 'அபிதா'...

(என் வயதினர் அநேகருக்கு இவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை!)

தி. ஜாவின் பாயாசம் கதை வர்ணனை ஒருவிதம் என்றால் தன் காதலி போலவே இளம் வயது நகலை பார்த்ததும் மனதில் தெறிக்கும் எண்ணங்களை, இயலாமையை, அந்த 'விபத்தை'... 

கடவுளே! தமிழ் சொற்களுக்கு இவவ்வ்வளவு வலிமையா என மனது தூக்கிப்போட்டது (நெபாகோவின் லோலிடா நாவலில் 'stream of consciousness' வகையில் விசைகூட்டி விழுந்த ஆங்கில சொற்றொடரை படித்தபோது அந்த மொழி மீது ஏற்பட்ட வியப்பைவிட பன்மடங்கு அபிதா வாசிக்கையில்)...

அதன் பின் சௌந்தர்ய, புத்ர என மறுபடி மறுபடி படிக்கையிலும் எனக்கு இவர் யார் என்று புரியவில்லை.

லா.ச.ரா வாசிப்பவர்க்கு அவரை தெரிந்திருக்க / புரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

சென்ற நூறாண்டின் தமிழ் எழுத்தாளர்களில் தலை சிறந்தவர்களில் தனிப்பிறவி இவர் எழுத்து.

ஒரு நூலேனும் வாசித்துதான் பாருங்களேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்