முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதர் வாழத்தகுதியற்ற ஊரில் இறை இருக்குமா?


தேன் ஈக்கள் இயற்கையின் இயக்கத்துக்கு தம் சிறகசைவால் வலு சேர்க்கும் உன்னதங்கள்.

மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை என காதலி காதலனிடம் சொல்கிறாளென்றால் அது இவர்கள் இனத்தின் உரையாடலாகவே இருக்கும். வசந்தத்திற்கு சிட்டுக்குருவிகள் வண்ணம் சேர்ப்பது போல, தேனீக்கள் நம் உணவுக்கு வண்ணம் சேர்ப்பவை. 

ஒரு மிக முன்னேற்றமடைந்த சமுதாய கட்டமைப்பு, பணிப்பகிர்வு, தொலைநோக்குப்பார்வை, உணவு சேமிப்பு... இவையத்தனையையும் ஒரு மரக்கிளையில் காற்றில் ஊசலாடியவண்ணம் நிகழ்த்தமுடியுமா நம்மால்? இச்சிறுபூச்சிகள் அற்புதத்தின் பெருவடிவு அல்லவா!

இரு வேறு தேனீ கூட்டங்கள், உணவுக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ என்றாவது, எங்காவது சண்டையிட்டதுண்டா?

நம் வீடழித்து கூடு கட்டியதுண்டா?

காடழித்து கழனியமைத்ததுதான் உண்டா?

தேனீக்கள் ஓரிடத்தில் கூடு கட்டினால், அந்த இடம் அமைதியான, நஞ்சற்ற, பாதுகாப்பான இடம் என்று பொருள். இன்று மலைகளில் / காடுகளில் மட்டுமே அவை கூடு கட்டுவது இதனால்தான்.

நகருள் இப்படி ஒரு சூழல் அபூர்வமாக அமையுமானால் அங்கும் இவை கூடு கட்டும்.

அந்தக்கூடு மனிதர் கண்ணில் பட்டதும் சூழல் மாறும். 'கொட்டுமே' என பலரும், 'புகை போட்டு கலச்சிடலாம்' என சிலரும்...

முடிவெடுக்குமுன்பே இரவோடிரவாய் எவனோ ஒருவன் அறுத்து பிழிந்து குடித்து... வீசிச்செல்வான். 

வந்தாரை வாழ வைக்கும் நம் மண்ணில் உணவு தேடி வரும் (நமக்கு உணவை வழங்க வரும்!) சிறு பூச்சிகளுக்கு ஏனோ இன்று இடமில்லை...

நகரங்களில் இப்படியென்றால் வேளாண்மை வாழும் சிற்றூரில்... பூக்களும் நஞ்சாச்சு, அவை தீண்டிய தேனீக்களும் மாண்டாச்சு...

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது முதுமொழி.
தேனீக்கள் இல்லா ஊரில் பூ காயாகாது, தாவரம் தழைக்காது, வாழ்வு நோயில் வீழும் என உணர்ந்தவர் கோயில்தோறும் நந்தவனம் அமைத்து பூக்கள் வளர்த்து தேனீக்களை வரவேற்கவும், அந்த ஊரில் தொட்டது துலங்கி நட்டது தழைந்து விளைச்சல் பெருகும், மகரந்த சேர்க்கையால். இதனால்தான் கோயில் இருக்கும் ஊர் தழைந்தது.

இன்று கோயில்களில் தரையனைத்தையும் பூசி மெழுகி, நந்தவனங்களை மனிதர் வசிப்பிடமாய் மாற்றி, விவசாயம்/விளைச்சல் நொடித்ததென செயற்கை உரம் கொட்டி செயற்கை உணவு வளர்த்து. 'இந்த நஞ்சுணவு எனக்கு மட்டுமே' என ரவுண்டப் தெளித்து ஏனைய உயிரனைத்தையும் கொன்று, நம் நஞ்சுணவு நம்மை கொல்லத்தொடங்க பதறி மருத்துவம் தேடி ஓடி, அவர்கள் கைவிரித்தபின் இயற்கையிடம் தீர்வு வேண்டி புல்லையும் கிழங்கையும் உண்டும் மருகி மாயும் பெருங்கூட்டமாய் நாம்.
செயற்கையாய் பெட்டிகளில் தேனீக்கள் (கூடு) வளர்த்து, அவற்றின் உணவை கொள்ளையடித்து, விற்று என நாம் நவீன வணிகம் பெருக்க, நாமனைவருமே ஏதோவொரு 'பேராசைப்பெருவணிக'த்தின் செயற்கைக்கூடுகளில் அவர்களுக்காக திரவியம் சேமிக்கும் தேனீக்கள் என்பதை யார் சொன்னால் கேட்போம்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்