முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நானும் மழையானேன்...


இரு ஜோடி காக்கைக்கண்கள்.

ஒயிலாய் நடைபோடும் தோகைநீண்ட மயில்.

டொட்டொட்டொட்டொட்டொட்டென சிவப்புக்கொண்டையை ஆட்டியபடி மரம்கொத்தும் குருவி.

'அப்ப்பா! என்ன ஒரு சத்தம்!!' என உடல்  குளுக்கி செய்தி பறிமாறும் சாம்பல் குருவிகள்.

மலரிலிருந்து வண்ணம் பிரிந்தது போல் அகலும் வண்ணப்பூச்சி, இன்னொரு மலரில் தம் வண்ணம் சேர்க்கும், மீண்டும் மீண்டும்.

நூறு கால் கொண்டு சிற்றிடம் தாண்டும் சிவப்பு இரயில் மரவட்டை.

சிறு குளத்தில் வாலாட்டும் வண்ண மீன்கள்.

பஞ்சுப்பொதியும் முதுகுக்கூடுமாய் அருகில் மிதக்கும் நத்தைகள்.

இது இரவா பகலா என கிளையிலமர்ந்து விழிக்கும் ஆந்தைகள்.

குளிருக்கு இதமாய் கம்பளி போர்த்தி இலை மேயும் பூச்சிகள்.

புல்லின் நுனி தீண்டும் ஆவலில் விரைந்தேறும் கருப்பு சிவப்பு வண்டுகள்.

மெலிதான காற்றில் ஆடி மெல்லத்தரையிறங்கும் விடுபட்ட கொடிமலர்.

இத்தனையும் என் மனதில் எழுப்பிய வண்ணங்கள் போதாதென மென்மேலும் வண்ணங்கள் சேர்த்து கழுவிச்செல்லும் மழைச்சாரல்...

சாரலால் காதலால் தளும்பும் மனதின் அடியூற்றிலிருந்து உற்சாகக் கூவல்,
"நான் நேசிக்கிறேன்! ஐ லவ் நேச்சர்!'

பழகிப்போன கூவலால் வண்ணம் கலையாமல் உயிரனைத்தும் தம் இயல்பில் திளைக்க, அனைத்தையும் நனைக்கும், தொடர்ந்து பெருமழை.

ஒவ்வொரு துளியிலும் கரைந்து மறைந்து முகிழ்த்து துளிர்த்து... வண்ணம் குறையாமல் நான், வண்ணம் மெருகேறி நான்...

மழை தீண்டிய 'வண்ண'மும் செழிக்கும்!

கரைத்தது கரைந்தது, கரைந்தது சேர்ந்தது, சேர்ந்தது மறைந்தது, இந்த ஓவியத்தின் வண்ணத்துளிகளுள் ஒன்றாக, பலவாக...

நானும் மழையானேன்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...