முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிழலின் அருமை


தேங்காய் எண்ணெய் தடவி படிய தலைவாரி புது சொக்காயுடன் பள்ளி சென்ற முதல் நாள்.

பாலர் பள்ளி ஆசிரியையை தேவதையாய் உணர்ந்து திருமணம் வரை ஆசைப்பட்ட குழந்தை இதயத்தின் படபடப்பு.

நெற்றியில் திருநீறுடன் மண்டியிட்டு சிலுவையிட்டு ஆமென் என கண்விழித்து சுடராடும் மெழுகுவர்த்தியை கண்சிமிட்டாது கண்ட நொடிகள்.

பக்கத்து வீட்டு வசுமதியுடன் விளையாடுகையில் இயல்பாய் இடித்து நகர்ந்து 'நமக்கேன் இப்படி இல்லை' என குழம்பி நகர்ந்த தருணம்.

கால்கள் தரையெட்டா வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் திக் திக் மணித்துளிகள், தலைதெறிக்கும் அன்போடு சகோதரன்  பின்னால் ஓடி வரும் நம்பிக்கையில்.

தந்தையின் விரல்பிடித்து கோவில் பிரகாரம் வலம் வந்த நாட்கள் (விரல் தந்த சாமியின் முகம் தவிர வேறெந்த சாமி முகமும் நினைவிலில்லை).

கத்தியும் கரண்டியுமாய் சண்டைபிடித்த சகோதரி, அன்போடு என்றும் அரவணைத்த அம்மாவின் கை(அடுக்களை) த்தழும்புகள்.

எதிர்பார்ப்பற்ற பதின் பருவ விளையாட்டு தோழமைகள், எடைபோடாத நட்பும் சுற்றமும் சூழ்ந்திருந்த காலங்கள்.

பதின்பருவத்தில் முதல் எதிர்பால் நட்பு... கண்டிப்பாய் காதலென்று ஊர்த்தெரு முணக, 'ஏனிப்படி தப்பாச்சி' என அதையும் நட்போடு அளவளாவி 'பேசுவோர் பேசட்டும், நம் நட்பு நமக்கே' என்று தெளிந்த, சிந்தனையிலும் சிறகு முளைத்த நாட்கள். 

நெற்றியில் திருநீறோடு பள்ளி வளாக மசூதியின் முன் மீன் தொட்டியில் வண்ண மீன்களை என்னோடு சேர்ந்து வேடிக்கை பார்த்த நண்பகல் வெயில்.

முதிர் பள்ளி நாட்களில் முதல் முதலாய் நண்பன் தந்த மஞ்சள் இலக்கியம் ரகசியமாய் படித்து உடலெங்கும் வெம்மை பரவிய நொடிகள்.

கல்லூரியில் கால்வைத்த முதல் நாள்.

வெவ்வேறு உலகங்களிலிருந்து நம்பிக்கை வழிய உடன் சேர்ந்த நட்புகள் தந்த மகிழ்ச்சி, பகிர்தல் பற்றிய புதிய புரிதல் உணர ஆரம்பித்த நொடிகள்.

இருபத்தி நான்கு மணி நேரமும் நாடி நரம்புகளில் (ஊரிலுள்ள எதிர்வீட்டு காதலியின்) காதல் கசிந்த அறை நண்பன் என்னுள் உருவாக்கிய மயக்கத்தில் என் 'சிறகு முளைத்த' நாட்களின் நட்பை காதல்தானா என வாழ்த்து அட்டை மூலம் உரசிப்பார்த்த தருணம். 

கட்டுப்பாடுகள் நிறைந்த வீடு பள்ளி வாழ்வுக்கு மாற்றாய் கட்டற்ற சுதந்திரம் தந்த கல்லூரி விடுதி வாழ்வின் முதல் நீலம், முதல் லத்தியடி (ஆங்கிலத்தை வெறுத்த நள்ளிரவு ரோந்து போலீஸ்) 'சுதந்திரம் ஏராளமான பொறுப்பை உள்ளடக்கியது' என வாழ்வின் முதல் தேர்வுத்தோல்வி புரியவைத்த நாள்.

கல்லூரி இறுதி நாள் விழாவில் மேடையேறி பேசி, நடனமாடிய நிமிடங்கள். 

படித்த கல்லூரியிலேயே ஆசிரியனாய் வகுப்பில் நுழைந்த தருணம்.

வகுப்புத்தோழியின் மரண செய்தியை வாங்கி கல்லூரியில் ஆசிரியனாய் செய்திப்பலகைக்கு அறிக்கை எழுதிய தருணம்.

வாழ்வின் பாதையை முடிவு செய்த காதல் பூத்த தருணம். அதற்கு முன் ஊடாடிய காதல் போன்ற ஆனால் காதலற்ற நட்புகள் தொடங்கிய, முடிவுற்ற தருணங்கள்.

காதல், திருமணமாய் மாறிய நாட்கள். முதல் கூடல், முதல் ஊடல், முதல் பிணக்கு...

தந்தையான தங்கத்தருணங்கள், தந்தையாக நெஞ்சு நெகிழ்ந்த நாட்கள்.

நண்பனின் மூன்று வயதுக்குழந்தை மூச்சற்று மலையுச்சி புதை நில சர்ச்சில் படுத்திருக்கையில் தனியே அவளுடன் வேண்டுதலில் கழித்த மணித்துளிகள், புதைகுழயில் பனிப்பொழிவில் அவளை இறக்கி மூடிய நொடி...

இனிமை, இளமை, கடுமை, முதுமை, நட்பு, பிரிவு, துரோகம், அற்புதம், மானுடம்...

அவ்வப்போது நிகழும் நட்பின், சுற்றத்தின் மரணங்கள் உணர்த்தும் வாழ்வின் நிதரிசனம், அவற்றை மறக்கச்செய்யும் நிகழ்வாழ்வின் தேவைகள், தேவைக்கும் விருப்புக்கும் இடையில் ஊடாடும் வாழ்வை தேவைக்கு அருகில் நிறுத்தி பசுமையின் ஆதி சுவடுகளில் நடக்க முடிவெடுத்த நொடி, 

தொடரும் அப்பயணம் தரும் அநுபவங்கள்...

முதல் விமானப்பயணம், முதல் பனித்துளி தந்த பரவசம். முதல் பிரிவு, முதல் முத்தம், முதல் மாமிசம் சுவைத்த நொடிகள், முதல் நீலம், முதல்... முதல்.... முதல்...

நிழலின் அருமையை நிழலில் மட்டுமே உணரமுடியும்; வெயிலில் அல்ல.

நினைவின் ருசியென்னவோ நினைவோடு மட்டும் நின்றுவிடுவதில்லை... திகட்டுவதுமில்லை. 

நினைவின் இறுதி இழை அறுபடும்வரையிலும் இந்த நீள்பின்னல் தடத்தில்... பயணம் தொடரும்... புதிய பின்னல்கள் மற்றும் அவற்றின் ஊடான வெளியில்.

நினைவு சுகம்,
வாழ்வு தவம்,
வாழ்தல் வரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...