முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவு மெய்ப்படும்!


நாளை (26 சனவரி) மற்றொரு நாளே.



எனது தேசத்தில் களவில்லை, பொய் புரட்டு இல்லை, பித்தலாட்டம் இல்லை, ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதில்லை, தாழ்த்துவதில்லை, வீழ்த்துவதில்லை, அழிப்பதுமில்லை.

உயிரோட்டம் நிறைந்த எனது தேசத்தில் சகல உயிரும் அண்டிப்பிழைக்கும், செழிக்கும்.

நாங்கள் உயிரனைத்தும் போற்றுவோம், இயற்கையை நேசிப்போம். காடு மலை மேடு பள்ளம் நதியோட்டம் மாற்ற மாட்டோம். நீர் நிலைகளையும் அவ்வண்ணமே.

தேவைக்கு வாழ்வோம், தேவையறிந்து உதவுவோம், வாழ்வினை விரும்பி வாழ்வோம்...

தேசம் எனும் சொல்லை 'நேசம்' எனும் சொல்லாய், செயலாய் மாற்றும் வல்லமை நம் அனைவருக்கும் இறை தந்த கொடை. 

என் மனதிற்குகந்த முண்டாசுக்கவி வல்லமை தாராயோ என இறைஞ்சியது தன்னலம் பயனுற அல்ல, (மாநிலம்) நானிலம் பயனுற. அவன் நானிலம் மீது கண்டதனைத்தும் 'நமையன்றி வேறில்லை' அல்லவா! 

'நமை' என்பதை மனிதர்கள் மட்டுமே என்ற தவறான புரிதலுடன் நானிலத்தின் மீது நாம் வரைந்த வெறும் காற்றுக்கோடுகள்தானே மாநில, தேசிய எல்லைகள்....

காக்கைக்கும், குருவிக்கும் ஏனைய மனிதர் அல்லா உயிர்களுக்கும் இந்தக்கோடுகள்தான் பொருந்துமா?

"மக்களால், மக்களுக்காக" என்ற அடிப்படையை சற்று மாற்றி, "மக்களால், அனைத்து உயிர்களுக்காக" என்று நாம் ஒவ்வொருவரும் உணரும் தருணத்தில்தான் நம் 'குடியாட்சி' தழைக்கும், நான் தொடக்கத்தில் பதிந்தவை அனைத்தும் நடக்கும், கனவு மெய்ப்படும்! 

பின் குறிப்பு: 

நானிலம்? 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். 

இந்த நாலில் எது பொய்த்தாலும் அது பாலை என்ற ஐந்தாம் நிலமாகும். 

நான்கும் பொய்த்தால்?

ஒற்றை நிலமாகும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...