முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாச்சியார் என்கிற நான்...


நாச்சியார் என்கிற நான்

பிறப்பு புதிர். என்னை துளசி செடிக்கடியில் கண்டெடுத்தவர் விஷ்ணு பக்தர். என்னை தன் குழந்தையாகவே வளர்த்தார். வீடெங்கும் சுற்றமெங்கும் வீதியெங்கும் ஊரெங்கும் பெருமாள் பக்தி கமழ்ந்தாலும் எனக்கு ஈர்ப்பு என்னவோ ஆயர்பாடிக்கண்ணனிடம். சிறு வயதில் பெருமாள் அவதாரக்கதைகளில் எல்லா சிறார்களையும்போல கண்ணன் என்னையும் ஈர்த்துவிட்டான்.

ஈர்ப்பு பக்தியானதற்கு வளர்ந்த சூழல் காரணமாயிருக்கலாம். எனக்கு விளையாட தோழமைகள் இன்றி / இருந்தாலும் கண்ணன் என் தோழனானான். என் கற்பனைக்கண்ணன் எனக்கு உகந்தவை மட்டுமே செய்வான், எல்லையற்ற நட்புடன்.
நட்பு பக்தியாக, பக்தியும் தமிழும் குழைத்து திருப்பாவை வடித்தேன், கண்ணனுக்காக, கண்ணனால்.

பதின் வயதிலேயே திருமணம் நான் வாழ்ந்த காலத்தின் கட்டாயம். கண்ணன் நினைவை வேறொரு ஆணுடன் பங்குபோட மனமின்றி திருமணத்தில் நாட்டமின்றி, முயற்சியெடுத்த தந்தையை தடுக்க 'கண்ணன் வசம் என் சுயம். அற்ப மானிடர்க்கல்ல' என்றேன், பிடிவாதமாய். 

வேத விற்பன்னர், சமூகம் மதிக்கும் தந்தை...  வேறு வழியின்றி என் நிலைப்பாட்டுக்கு மனதின்றியே சம்மதித்தார். உடற்கூறு மாற்றங்கள், நட்புகளின் மண வாழ்வு தந்த புரிதல்கள், கற்பனையில் வளர்த்த கண்ணன் பக்தி ஒரு புள்ளியில் காதலாய். கசிந்து உருகி, உன்மத்த நிலையை எய்திவிட்டேன்,  காதலிலே மொத்தம் ஏழு நிலை என்று உங்கள் கவிஞன் ஒருவன் சொன்னதுபோல். தந்தைக்கு சமுதாய அழுத்தம் அதிகமானாலும் என் காதல் என்னவோ ஒவ்வொரு நிலையாய் கடந்துகொண்டிருந்தது. 

கற்பனைக்கண்ணன் கடவுள் அவதாரம், தவமிருந்தால் வந்து தழுவிக்கொள்வான் என்று பலர் கூற கேட்டு வளர்ந்தவள், தமிழை துணைக்கழைத்து எழுதினேன் பாசுரங்கள் 143. காதல், காமம், கூடல், ஊடல் என 143 பாசுரங்கள். மனதளவில் என் வசிப்பிடத்தையே ஆயர்பாடியாக மாற்றிக்கொண்டு, சுயம் விழித்திருக்கும் நொடி ஒவ்வொன்றிலும் கண்ணனுடன் கழிந்த / கண்ணனுக்காய் காத்திருத்தலில் கசிந்த பாடல்கள்...

என் திருப்பாவை கேட்டு நெகிழ்ந்தோர்க்கு, என்னை 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக்கி' மகிழ்ந்தோர்க்கு இந்த 143 சற்றும் ஒவ்வாத தமிழ்... வாரணமாயிரம் கண்டவள்தான் கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, செங்கமல வாய்தான் தித்தித்திருக்குமோ என்று மருகினேன்... கண்ணன் பித்து கவசமாய் இருந்ததால் தப்பிக்க முடிந்தது. ஆனால் இதுவும் சில காலம் மட்டுமே. 

இட மாற்றம் நல்லதென, திருவரங்கத்தில் ரங்க மன்னராய் என் கண்ணன் என சுற்றம் நம்பி என்னை பல்லக்கில் ஏற்றவும் கிளம்பினேன் என் கண்ணனை மணமுடிக்க.

அனந்த சயன கோலம் கண்டேன், அருகில் சென்றேன்...

அரங்கனுள் நான் மறைந்ததாய் பின்னாளில் அறிந்தேன். அன்றிலிருந்து இன்று வரை காற்றாய் தமிழாய், காற்றில் தமிழாய்...

பித்தின்றி இந்த வாழ்வை அந்த நாளில் எந்த பெண்ணாலாவது வாழ்ந்திருக்க முடியுமா? சமுதாயம்தான் விட்டிருக்குமா?

என்னைப்புரிந்து கொள்ள 'தம்முள்ளே பெண் தன்மை கொண்டவரால் மட்டுமே முடியும்' என ராமானுசர் சொல்லிச்சென்றார்.

அன்று போல் இன்றும் நாச்சியார்களை உணர்ந்து போற்றும் 'தாயு'மானவர்களை இங்கு என்னால் இனம் காண முடியவில்லை... என்ன செய்வது, அவரவர் கண்ணன் அவரவர்க்கே!

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்... எல்லாம் என் கண்ணனுக்கே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்