முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆண்மையற்ற தேசம்



காகம் தூக்க, நரி பிடுங்க என பாட்டிகள் வீட்டுத்தோட்டத்தில் வடை சுட்ட காலமெல்லாம் மாறி... ஆச்சு பல வருசம். 

வீட்டுத்தோட்டம் காணாமப்போச்சி. 'அம்புட்டு எடம் இருந்துச்சில்ல, பூமி வெலை ஏறுனதும் அங்கன ஒரு வீட்டையே கட்டிட்டம்ப்பு, வாடகைக்கு ஆச்சில்ல' என்று எதிர்கால வைப்பு நிதி உண்டாக்கிய மகிழ்ச்சி கூட ஏராளமான கட்டுப்பாடுகளுடனே இயங்குகிறது... குழந்தைகளுக்கு காகமும் நரியும் தந்த மகிழ்ச்சி குடியிருப்பவர், வீட்டு சொந்தக்காரருக்கு தரப்போவதில்லை... 'தண்ணி வர்லயே', 'அங்க செவுரு காரை உதிருது', 'பாத்ரூம்ல தண்ணி போகலையே...' என்பதாக கணைகளும், 'ஆணியே அடிக்காதீங்க', 'ஒரு ஆளுக்கு 100 லிட்டர்தான்', 'பத்து மணிக்கு மேல சத்தம் குறைங்க' என எதிர்க்கணைகளுமாய் நித்தம் ஒரு யுத்தம். 

இவை எதுவுமே எந்த வீட்டாரிடமும் கேட்காத காகமும் நரியும் இன்று புத்தக கதை வடிவில் மட்டும் அந்த வீடுகளில், அதுவும் அந்த வீடுகளில் குழந்தைகள் இருந்தால் மட்டும்...

நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு 'காடு' புரியவைத்திருக்கிறோம்? 'காட்டில மரம் செடி கொடி மற்றும் கொடிய விலங்குகள்' என்பதாகத்தான் வயது வந்தவர்களின் புரிதலும் இருக்கிறது. விஷப்பையோ பல்லோ எலும்பு உடைக்கும் வலிமையோ இல்லாத மனிதனை விட கொடிய விலங்குகள் எங்காவது ஏதாவது உண்டா என்ன?

காட்டில் ஒரு சிறு உயிருக்கு ஆபத்து என்றால் ஒரு இனமே கூடி அதை காப்பாற்ற போராடும். நாடு என்று நாம் மார் தட்டும் நிலப்பரப்பில்?

மனிதர்கள் (ஆண்கள்) மட்டும் ஏன் சதைக்காக சக மனிதர்களையே (பேதை முதல் பேரிளம்பெண் வரை) வேட்டையாடுகிறார்கள்?

சில நாட்களுக்கு முன் ஒரு பதின்பருவ சிறுமி தம் இனத்தாலேயே (மனிதர்கள்தான்) கோரமாக வேட்டையாடி அழிக்கப்பட்ட செய்தி ஏன் ஒரு செய்தியாக மட்டுமே பார்க்கப்படுகிறது?  ஊடகங்கள் ஏன் அறச்சீற்றமின்றி இந்நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு புதிய நாயகியின் புதிய வனப்பை வெளிச்சமிட்டுப்பரப்புவதில் மட்டும் ஆர்வமாயிருக்கின்றன? விற்பனையை, வருவாயை பெருக்க 'எதை' வேண்டுமானாலும் விற்கலாமா? நாமும் ஏன் பார்வையாளராக மட்டுமே இருக்க பழகிக்கொண்டு இருக்கிறோம்?

இந்தச்சிறுமி யாரோ ஒருவரின் ஆசை மகள், அக்கா, தங்கை, அத்தை, சித்தி, பேத்தி...

வேட்டையாடிய ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் மகன், அண்ணா, தம்பி, மாமா, சித்தப்பா, பேரன்... அல்லவா?

எல்லைகளை காக்க நாம் காட்டும் தீவிரம் தேசங்களை தேசங்களாக்கும் நம் மனிதர்களின் வாழ்வுரிமையை காப்பதில் ஏன் காட்டுவதில்லை? தனி மனித எல்லைகளின் தொடர் பிணைப்புகள்தானே ஊர், மாநில, தேச எல்லைகள்?

வீடுகளில் திறந்தவெளி இருந்து அதில் காக்கைகளும் நரிகளும் இன்றும் நடனமாடிக்கொண்டிருந்தால் ஒருவேளை நம் இனம் வேட்டைக்குணம் இன்றி வேறு மாதிரியான, மேன்மையான, மென்மையான வாழ்வு நிலையை அடைந்திருக்கலாம்...

இறையாண்மையின் ஆணி வேர் ஆண்மை. ஆண்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத செயல்.

ஆண்மையிழந்த (Impotent) மனிதர்கள் இன்னும் எத்தனை உறுப்புகளில் எத்தனை கூராயுதங்களை பயன்படுத்தினாலும் இழந்த ஆண்மையை பெறப்போவதில்லை.  இவர்களது செயலை மிருகச்செயல் என கூறி மிருகங்களை இழிவு செய்வதும் வேண்டாமே. ஒரு மிருகம் சக மிருகத்தை இத்தகைய கொடுமைகளுக்கு ஒருபோதும் ஆற்படுத்துவது இல்லை..

தெய்வமென்று போற்றவும் வேண்டாம், போகப்பொருளாய் கிழித்தெறியவும் வேண்டாம். காக்கை, நரி கதை போதும். பெண்மையை மதிக்காத ஆண்மை எந்நாளும் ஆண்மையாகாது என்பதை இப்போதாவது நம் பள்ளிகளில், வீடுகளில் குழந்தைகள் குழந்தைகளாய்  இருக்கும்போதே போதிக்க ஆரம்பிப்போமா நட்புகளே? மாற்றம் நம்மிடமிருந்தாவது தொடங்கட்டுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்