முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவதைகள் பூப்பறிப்பதில்லை


தேவதைகள் பூப்பறிப்பதில்லை!


வால் முளைத்த கூட்டமொன்று நெடுங்காலம் முன்பு வால் உதிர்த்து மரத்திலிருந்து இறங்கி, வெயிலுக்கும் மழைக்கும் மரத்தடியில் அண்டிப்பிழைத்ததாம். பின்னொரு நாளில்  அக்கூட்டம் கல் அறைகள் கட்டி பதுங்கப்பழகியபின், அவர்களல்லாத வேரொன்று கல்லருகில் வந்தாலும் கோடரி தூக்கி சிதைத்து வேரறுத்து...பெருவிசை வாகனம் செய்து, இன்னும் விசை கூட்டி ஓட்டுவதற்காக அவை ஓடுமிடமெல்லாம் காடறுத்து மண் பெயர்த்து தார் பூசி மெழுகவும் பெருநகரம் உருவாச்சாம்...


பிட்யுமெனும் தார் பூச்சு தாரடி மண் தரைக்கு  மூச்சு முட்ட, விரையும் பெருவிசை வாகனங்களில் அரைபட்டு, சிறுவிசை மனிதரிடம் மிதிபட்டு, வெயில் மழை காற்று குளிரில் ஒதுங்க வழியின்றி, கதற மொழியின்றி மண் சாலைகள் மௌனமாய் ஓலமிட்டு ஒடுங்கிப்போயின.

கந்தலாய், நெருடலாய் நாட்கள் நகர, தார் சாலைகளின் அடியிலிருந்து பெயர்ந்து தப்பிச்சென்ற மண் துகள்கள் (காற்று மழை உதவ) தந்த நம்பிக்கையில், நகரத்தின் பிடியிலிருந்து இந்த நொடியில் கூட திமிறி வெளியேறத்துடிக்கும் மண்தரை... 

நகர எல்லை தாண்டியும் அதைத்துரத்தும் தார்ப்பூச்சு... 

அதனின்றும் அவை தப்பியோடி தஞ்சம் புகும் இடமெல்லாம் மலர் சுமந்த மரங்கள்; இழுத்து அணைக்கும் வேர்களுடன்.


முடிவற்ற தார் சாலை என்று ஒன்று எங்காவது இருக்கிறதா என்ன? யாரேனும் செய்யமுடியுமா என்ன?

இந்த தார் சாலைகளில் மட்டும் ஏன் உயிர் முளைப்பதுமில்லை, தங்குவதுமில்லை?

வாழ்வு தேடி, இலக்கென்று எதையெதையோ துரத்தி அவற்றில் அலையும் சிறுவிசைகூட்டம் அறியுமா 'மண் தரை' நகரிலிருந்து தப்பிச்சென்று சேரும் இடங்களில் மட்டுமே வாழ்வு இன்னும் அவர்களுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறது என்று?



மரங்கள் அடர்ந்த மண் தரை என்றும் பின்னமாவதில்லை (சிதைவதில்லை)  கண்டிருக்கிறீர்களா?

இந்த மரங்களில் தேவதைகள் வாழ்கின்றனவாம். அவற்றுக்கு மலர்களென்றால் கொள்ளையின்பமாம். ஆனாலும் மரங்களுக்கு வலிக்குமென்று அவை ஒருபோதும் மலர் பறிப்பதில்லையாம். மரங்கள் சொரியும்வரை காத்திருந்து பொறுக்கிச்செல்லுமாம், நகரிலிருந்து தப்பி மீண்ட மண்பரப்பில் சூடி மகிழுமாம்.

மரத்திலிருந்து தரையிறங்கும் ஒற்றை மலரை வாழ்நாளில் ஒருமுறையாவது (காலடியில் மண் படர) நின்று ரசித்தவர்க்கு மட்டுமே சொர்க்க ராஜ்ஜியத்தில் இடமுண்டாம். 

அங்கு பெருநகரங்களே இல்லையாம், தார் சாலைகளே இல்லையாம். இதுவும் தேவதைகள் சொன்னதுதான்!

பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...