முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கபிலன் வீட்டில் பூக்கள் உண்டு

என் வீட்டு தோட்டத்தில் ஓரமாய், மௌனமாய் அவள், நான் பார்க்கும்போதெல்லாம் நின்றுகொண்டே.

வாய் நிறைய சிரிப்பவள் அஞ்சாறு மாசமா இப்படி இருக்காளே என்று நாளாக நாளாக என்னுள் ஒரு வேதனை. 

எப்படி கேட்பது, எங்கு தொடங்குவது, நான் பேசுவது அவளுக்குப்புரியுமா, புரிந்தாலும் கேட்பாளா என்றெல்லாம் குழப்பம்.

தனியே சில முறை ரிகர்சல் பார்த்துவிட்டு ஒரு நாள் வெட்கம் பிடிங்கித்தின்ன (first time ங்க!), பேச ஆரம்பித்தேன் (யாராவது பாத்துட்டா நம்மளப்பத்தி என்ன நினைப்பாங்க என்ற யோசனை வேற...).

முதல் முயற்சி தோல்வி. அடுத்த சில முயற்சிகளும் அப்படியே...
இப்படி நாட்கள் நகர்கையில், என் வெட்கம் விலகி எங்கோ ஒரு புள்ளியில் ஆத்மார்த்தமாக பேச ஆரம்பித்தேன்.

நெடுநாள் மௌனத்தை ஒரு நாள் கலைத்து அவள் கேட்ட ஒற்றைக்கேள்வியால் நிலைகுலைந்தேன்; 'ஏன் வெட்டின?'

குற்ற உணர்வுடன் பதில் சொல்ல முயன்றேன், 'நான் பண்ணலம்மா, வேணும்னு பண்ணலம்மா...உறவினர் கேட்டதினால ஒரு ஆள வச்சி வெட்டினேன்'.

'ஏவினது நீதான?'

'...ஆமாம். தெரியாம தப்பாயிடுச்சி...'

'உங்க இனமே அப்படித்தானே? ஒரு வார்த்தை என்னைக்கேட்டிருக்கலாமே?'

என் மீசை மயிரைக்கூட என் அனுமதியின்றி நறுக்க யாருக்கும் அனுமதி தராத நான் அவள் கேள்விக்கு பதிலின்றி ...

மனம் ஒன்றி பல நாட்கள் மன்னிக்க வேண்டியபின் மனமிறங்கி...இன்று மீண்டும் சிரித்தாள்!

(கபிலனின் கன்மணி பூப்பறிப்பதற்கு முன் செடியிடம் அனுமதி பெற்றே பறிக்கிறாள். அவர்கள் இல்லத்தில் கண்டிப்பாய் ஏராளமாய் பூ பூக்கும்!

அவளது செயல் என் 'கண்' திறக்க, அதன் பின் நான் என் வீட்டில் பூக்காது ஒரு வருடமாய் நின்றவளிடம் சில நாட்கள்தான் பேசினேன்! அவள் சிரிப்புதான் எவ்வளவு அழகு!!!).


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...