முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வலைக்கு வெளியே துள்ளும் எதுவோ! - 2


கேரளத்து எழுத்தாளர் நகுலனை அவர் வீட்டில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சந்தித்து உரையாடியதை நகுலன் இறந்தபின்பு பதிவிட்டிருந்தார் இந்த தலைப்பில். நகுலன் வீட்டில் அவர் கண்ட பூனையும் அதில் இடம் பெற்றதாய் நினைவு...

கண்ணன் வீட்டிலும் யாருமில்லை...இல்லை இல்லை...யாரோ இருக்கிறார்கள் ஆனால் கண்ணன் இல்லை.

கண்ணனை உங்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஒரு சராசரி மனித வாழ்வுதான் அவரது வாழ்வும். படிப்பு, வேலை, காதல், திருமணம், குழந்தை, குழந்தை படிப்பு, வேலை, திருமணம், பேத்தி,பேத்திக்கு முடியிறக்கி காது குத்து என ஐம்பத்தைந்து வயதில் கடமைகளை முடித்து, வாழ்வின்  வட்டத்திலிருந்து விடுபட்டு போய்விட்டார் நட்சத்திரங்களிடம்.

என்னேரமும் புன்னகை அணிந்தவர், இவரிடம் உதவி பெறாதவர் இங்கு குறைவே. ஓயாது வேலை, இறை பணி என இறுதி ஆண்டுகளை இறுதி என்று தெரியாமலே...

முதல் நாள் வங்கியில் அவரது இருக்கைக்கு முன்னால் நெடிய வரிசை. எப்போது அங்கு சென்றாலும் அவரை சந்திப்பதும், என்ன வேலை இருந்தாலும் நிறுத்தி என்னோடு அன்போடு உரையாடுவதுமாய் வழக்கம். 'நாளை பார்க்கலாம்' என்று அன்றுதான் முதல்முதலாய் பார்க்காமலே நகர்ந்தது. கடைசியாய் உயிரோடு பார்த்தது. 

மறுநாள் மாலை வீட்டு வாயிலில் மகிள மரம் யாராலோ வகிரப்பட்டு (vertical slant cut) மதில் மேல் சாய்ந்திருந்ததை வீடு திரும்புகையில் கண்டு பதைத்து கயிறு கட்டி நிமிர்த்துகையில் phone call...'கண்ணா சீரியசாம், ஒண்ணும் பண்ண முடியலன்னு டாக்டர் சொல்றாங்க' என அழுகுரல்.

பதறி ஓடி மருத்துவமனை சேர்ந்து நுழையுமுன்னரே விடைபெற்றுவிட்டார். காலையில் தனியே வீட்டில் மயக்கமாகி, மருத்துவ நண்பர் உதவியால் மருத்துவமனை அடைந்து பல பரிசோதனைகள், முடிவு வருமுன்னே முடிந்ததாய் சொன்னார்கள். இறுதி திமிடம் வரை வேதனையோ வலியோ வெளியில் தெரியாது உறவுகளிடமும் நட்புகளிடமும் பேசிக்கொண்டிருந்தாராம், 'block இருக்கு போல, stent வப்பாங்கன்னு நினைக்கிறேன்' என்று...

Iorta Rupture, இத்தனை நேரம் வலியில்லாமல் பேசிக்கொண்டிருந்தது ஒரு miracle என்றெல்லாம் மருத்துவர்கள் சொன்னார்கள். நம்பத்தானே வேண்டியிருக்கிறது...

அவர் வாழ்ந்த மாடி வீட்டில் அவரை சுமந்து வந்தனர் சிலர். இறுதி வழியனுப்புகையில் குறுகிய மாடிப்படியை வெட்டியெடுத்து இறக்கவேண்டியதாயிற்று. 

மகள், மருமகனுக்கு வெளி மாநில வேலை. அனைவரும் கிளம்பி போயாச்சி, வீட்டை வாடகைக்கு விட்டாச்சி.

ரசப்பாத்திரத்தில் தீர்ந்துவிட்ட ரசத்தின் கப்பியாய் அந்த வீடு இருக்கிறது.

இன்று கண்ணன் வீட்டில் கண்ணன் இல்லை. யார் யாரோ இருக்கிறார்கள், வீட்டருகில் பூங்காவில் அவர் நட்ட அரசமர ஆக்சிஜனை சுவாசித்துக்கொண்டு. அந்த மரத்தின் வயது 25...

இருப்பார் அவர், என் நினைவுகளில்; நினைவு அழியும் வரை. 

கண்ணனுக்கு இனிப்பு பிடிக்கும், பலாச்சுளை விருப்பம், கிரிக்கெட் பிடிக்கும், குழந்தைகள் பிடிக்கும், மனிதர்கள் பிடிக்கும். ஆஞ்சநேயர் மேல் அளவற்ற பக்தி. என்றெல்லாம் நான் சொன்னாலும் கண்ணனை தெரிந்திருக்க உங்களுக்கு வாய்ப்பு குறைவுதானே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்