முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரயில் வெடி!


ரயில் வெடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தீப்பெட்டியில் வெடி மருந்து திணித்து நுனியில் திரி சொருகப்பட்டிருக்கும். திரி இல்லாத மறுபக்கத்தில் குழல் போன்றதொரு அமைப்பு இருக்கும். அந்தக்குழலில் நூல் கோர்த்து இரு முனைகளையும் எதிலாவது எதிரெதிராக இழுத்துக்கட்டி திரியில் பற்றவைத்தால் மருந்து தீரும் வரை நூல் கயிற்றில் புல்லட் ரயில் போல பறந்து சாகசம் காட்டும்!

அனுபவித்திருக்கிறீர்களா?!

பாக்கியமில்லாதோருக்கு அறிமுகப்படுத்த கூகுளில் படம் தேடினால் வருவது அனைத்தும் "ரயில் வெடித்த" படங்கள்...

என்ன ஆயிற்று நமக்கு என்ற வருத்தத்தை சற்று ஒதுக்கி வைத்து விட்டு என் ரயில் வெடி சார்ந்த நினைவுகளைப் பகிர ஆவல் (இந்த ரயில் வெடி இப்போது எந்த வெடிக்கடைகளிலும் விற்கப்படுவதில்லை, தனி வீடுகளிலிருந்து பல்லடுக்கு குடியிருப்புகளுக்கு புலம் பெயர்ந்த நமக்கு அந்த நூல்கயிறைக்கட்டுவதற்கு இடமின்றிப்போனதால்...)

சிறு வயதில் கும்பகோணத்தில் தீபாவளி வரப்போகிற பரவசத்தில் துணிக்கடையில் பெற்றோரின் விரல் பிடித்து வண்ணமும் வாசனையுமாய் விரியும் சட்டை டவுசர் துணிகளின் அழகில் சொக்கி எதையோ கை காட்ட அது வெட்டப்பட்டு வீடு வரும். 

தையல்காரர்களுக்கு மதிப்பிருந்த காலம் அது. அளவெடுக்கும்போதே புத்தாடை தரித்த கற்பனையில் ஒரு இஞ்ச் உயரம் கூடும். (ஒரே ஒரு முறை தையல்காரர் இல்லம் தீப்பிடித்து அநேகர் புத்தாடையின்றி பண்டிகை கொண்டாடினர், நானும்தான். ஆயத்த ஆடைகள் வராத காலமது. மீண்டும் துணியெடுத்து, டெய்லர் பிடித்து...தைத்து...போங்கப்பா என்று விட்டுவிட்டோம்).

தைத்து தீபாவளிக்குள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இன்று மெர்சல் புக்கிங் ஓப்பனிங்குக்கு காத்திருப்பதை விட பல மடங்கு இனிமையானது (படம் தரும் ஏமாற்றம் ஆடை தராது!).

இடைப்பட்ட காலத்தில் கோலி, கிட்டி, பம்பரம் விளையாடுதல், வீட்டில் அச்சேறும் முறுக்குகளை பதம் பார்த்தல், பிடித்து வைத்த இனிப்பு உருண்டைகளை குரங்குகளிடமிருந்து காப்பாற்றுதல்! (நாங்களும் குரங்குகள்தான் அந்த வயதில்!) என்று நாட்கள் நகரும். பெரும்பான்மையாக இயற்கையோடு இணைந்த வீடுகளில் நடுவில் 'திறந்த முற்றம்' இருக்கும், மழை, வெயில், பறவைகள், தும்பிகள், குரங்குகள் என பாகுபாடின்றி அனைத்தையும் வரவேற்கும் முற்றம் வழியே இறங்கிய குரங்கொன்று என் அம்மா ஆடுகல்லில் மாவாட்டுகையில் ஒரு முறை கூட அமர்ந்து மாவு தள்ளியதெல்லாம் எங்களுக்கு பழகிய நினைவுகள் :-)

வீடுகளில் கூட்டம் அதிகமாகும், இனிப்பு கார வகைகளும்தான். ஆனால் பட்டாசுகள் இருக்காது அல்லது குறைவாகவே...

வீதிக்கு ஒன்றிரண்டு பெரிய மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் வீடுகளின் முன் பாய்விரிப்பது போல 100 வாலா, மேலதிகமாய் 1000 வாலாக்கள் விரிக்கப்பட்டு, தெரு கூடி நின்று வேடிக்கை பார்க்க, நின்று வெடிக்கும் (வெடியில் மருந்து அதிகம், விலை குறைவு, இன்றுபோலில்லை!).

பொதுவாக அனைவரும் மகிழ்ச்சியோடு சுற்றிக்கொண்டிருப்போம். தெருவில் எந்த நட்பு வீட்டில் நுழைந்தாலும் வயிறு கெடுக்காத பலகாரங்கள் கிடைக்கும். அந்த ஒரு வாரத்தில் பெரும்பான்மையான வீடுகளில் சமையல் இருக்காது.

தீபாவளி, வெடிப்புகையின்றி, குப்பையின்றி, சத்தம் அதிகமில்லாமல்...இருந்தது. ஊரிலும் தீபாவளி ரிலீஸ் ஆரவாரங்கள் இருந்ததில்லை. மகிழ்வான சந்திப்புகளும் இனிப்புப்பறிமாற்றங்களுமே வழக்கம்.

இன்று ஏராளமாய் செலவு செய்து, வெடி வெடித்து, புத்தாடைகள்(பன்மை!) அணிந்து புதுப்படம் பார்த்து கொண்டாடி விட்டு புகையினால் வலிக்கும் தொண்டைக்கு ஸ்ட்ரெப்ஸில்லும், உணவினால் வலிக்கும் வயிற்றுக்கு ஜெலுசில்லும் உட்கொண்டு. கடையில் வாங்கிய இனிப்பு, காரத்தை ஊர்பறக்கும் அவசரத்தில் நட்புகளிடம் முன்னரே தந்து, நட்புகள் குறைந்த 'சொந்த' ஊர்களில் தீபாவளிக்கு நாம்...

ரயில் வெடியை உங்கள் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்களேன் என்ற வேண்டுதலோடு நான்!

இருள் காட்டும் விளக்கின் எல்லையை விரிவாக்கி உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் அந்த ஒற்றைச்சுடரொளி அன்பையும் மகிழ்ச்சியையும் என்றும் நிரப்ப வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்