முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளைக்காக்கும் கடவுள்!


திருத்தலம்தோறும் மரங்கள் வைத்து அவற்றைச்சுற்றி கடவுள்களை எட்டுத்திசையும் நிற்கவைத்து, அமரவைத்து, படுக்கவைத்து, அக்கடவுள்களுக்கு வாகனங்களும் ஆயுதங்களும் தந்து, கடவுளிடம் வேண்டினால் பலிக்கும் என்ற எண்ணம் விதைத்து...இதையும் தாண்டி மரங்களை அணுகுவோரிடம் அவற்றை இறைத்தூதாய் காட்டி, நாம் கட்டிய ஒவ்வொரு கயிறிலும் உள்ள வேண்டுதலை மரம் சேர்க்கும் கடவுளிடம் என்று நெறிப்படுத்தி...இன்றளவும் கோவில்களில் களவாடப்படுவது கடவுள்கள் மட்டுமே, மரங்களல்ல! அப்பப்பா, மரங்களை மனிதர்களிடமிருந்து  காக்க என்னவெல்லாம் செய்யவேண்டியதாயிற்று! 

பூமியில் எத்தனை வகை மரங்கள் உள்ளதோ அத்தனை வகை சாமிகளும் இருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.

அத்தனை சாமிகளையும் தூக்கி வளர்க்கும், சாமிகளை "வளர்ப்பதற்காய்' சிதைந்தபின்னும் அம்மரங்கள்.

மர வகைகள் அதிகமில்லா பகுதிகளில் கடவுள் வகைகளும் குறைவே, உலகம் முழுதும்.

முல்லைக்கு மரத்தேர் தந்தவன் வழித்தோன்றிய சிலர் வேருக்கு இடரின்றி இல்லங்களை மாற்றியமைத்ததும் இங்கு நடந்ததுண்டு...

கடவுளரின் இல்லம் நம் கவனிப்பின்றி பாழடைந்து போனால், அங்கிருக்கும் மரங்களே காக்கும் அவர்களையும்! 

இன்று ஊருக்கு ஊர் கோவில் கட்டி அதில் மரங்களுக்கு இடமின்றி தரையெங்கும் தளமிட்டு குடமுழுக்கு செய்த மக்கள் மறந்தாலும் மறக்காமல் காத்திருத்து பறவைகள் துணையுடனே என்றாவதொருநாள் (கோவில்) விமானத்தில் இறங்கும் ஆல் அரச வேர்கள். 

கொல்லும் தொழிலை அரசனும் கடவுளும் அன்றோ நின்றோ செய்யட்டும், என்றும் நம்மைக்காக்கும் தொழிலை மரங்கள் செய்யும்; அவை அழித்தலறியா.

பூசலார் மனதில் கட்டிய கோவிலிலும் மரம் இருந்திருக்கும். இல்லாவிடில் இறை அங்கு சென்று அமர்ந்திருக்குமா என்ன?!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்