கடந்த நாற்பதாண்டுகளில் நம்மைச்சுற்றி எவ்வளவோ மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் மாறாது இருக்கும் சிலவற்றில் சினிமாவும் ஒன்று.
திரைத்தொழில்நுட்பங்களும் வெகுவேகமாக மாறினாலும் சினிமா தரும் மேஜிகல் உணர்வு மட்டும் இன்னும் அப்படியே மாறாதிருக்கிறது.
சினிமா என்பது எத்தகைய ஒரு மகத்தான ஆயுதம் என Gen Z பசங்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் தந்த ஜிகர்தண்டா XX, என்னை வேறொரு நினைவுத்தளத்திற்கு இழுத்துச்சென்றது.
வலிவலம் வலிவலம் என்றொரு சிற்றூர். அந்த ஊரில் 1980களில் ஒரே ஒரு டெண்ட் கொட்டாய். அதில் மொக்கை படங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் பக்கத்து சிற்றூர் ஒன்றில் நல்ல படம் ஏதாவது ஓடினால் சைக்கிளிலோ அல்லது நடந்து சென்றோ படம் பார்க்கும் கூட்டம் நிறைந்த சமூகம் அது.
எனது தாய்மாமா ஒருவரின் சைக்கிளின் பின்னிருக்கையில் ஒரு பௌர்ணமி இரவில் நான் அமர்ந்திருக்க, பகல் முழுதும் வேளாண் சார்ந்த பல அலுவல்களை முடித்து களைத்திருந்தாலும் சிவாஜி படம் பார்க்கும் ஆர்வம் அவரை உந்த, துணைக்கு அரை டவுசர் போட்ட என்னை டபுள்ஸ் மிதித்து ஐந்து கிலோ மீட்டர் நீளும் விளக்கு வெளிச்சமற்ற அந்த குறுகிய சாலையில் பயணித்து, அருகிலுள்ள சிற்றூருக்கு Just in Time வந்து, திருவிழாக்கூட்ட டிக்கட் கவுண்டரில் முண்டியடித்து நுழைந்து டிக்கட்டு வாங்கி, இருட்டில் தட்டுத்தடுமாறி காலி நாற்காலிகளை கண்டுபிடித்து அமர்ந்து சுதாரிப்பதற்குள் "விர்ர்ர்" ரென ஓசையோடு எங்கள் தலைக்கு பின்புறம் உயரத்திலிருந்து ஒரு ஒளிக்கற்றை பெருகி எதிரில் இருக்கும் வெள்ளைத்திரையை வெள்ளித்திரையாக்கி, சிவாஜி வந்தாச்சு!
மணல் தரை மற்றும் நாற்காலி வரிசை என இரண்டே பிரிவுகள்தான். அம்புட்டும் சனங்களால் நிறைந்திருக்கும் அந்த பின்னிரவிலும்.
சாரங்கதாரா திரைப்படம், "இந்தப்புறா ஆடவேண்டுமென்றால் இளவரசர் பாட வேண்டும்" என நாயகி ராஜசுலோசனா சொல்ல, இளவரசர் சிவாஜி "வசந்த்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே" என வாயசைக்க, டெண்ட் கொட்டாயெங்கும் கைத்தட்டலும் விசிலும் பறக்கும்.
கதை பெரிதாக நினைவில்லாவிட்டாலும் பாடல்களை 'பண்ணெண்டு, பைமூணு' என விரல் விட்டு கவனமாய் எண்ணியது நினைவில் இருந்தது.
இன்னொன்றும் அன்று நினைவில் பதிந்தது:
இடைவேளை நேரத்தில் கண்ணில் தென்பட்ட ஆண் பெண் முகங்களெல்லாமே வெள்ளாமைக்காட்டில் பகல் முழுதும் வெய்யிலில் வறுபட்டு வேலை செய்து களைத்த முகங்களே. ஆனால் அந்த முகங்கள் அனைத்திலும் எத்தனை பரவசம்! எத்தனை மகிழ்ச்சி!
தின வாழ்வை நகர்த்தவே போராடி வயிறு வளர்த்தவர்களின் வடிகாலாக, சிறிது நேரப்பரவசமாக, அன்றைய தினத்தின் ஒரே மகிழ்ச்சி நிகழ்வாக சினிமா இருந்தது அன்று. அந்த மகிழ்வை பெருக்க, இருக்கவே இருக்கிறது பவண்டோ மற்றும் காளி மார்க்கு கலர் சோடாக்கள்!
நாற்பது வருடங்களில் பலதும் மாறிப்போனாலும் இந்த "எளிய மக்களுக்கு இளைப்பாறும் உணர்வை தரும் படங்கள் மட்டுமே" இன்றுவரை பெருவெற்றி அடைந்திருக்கின்றன, ஒரு சில விதிவிலக்குகள் தவிர. இன்று திரைப்படம் எடுக்கும் எத்தனை பேரை இந்த உண்மை "இயக்குகிறது"? இன்று படம் பார்த்து வெளியே வரும் எத்தனை பேர் இளைப்பாறிய புத்துணர்வோடு வெளியே வருகிறோம்?
அன்றைய பின்னிரவில் படம் முடிந்து வெளியே வந்தால், சைக்கிள் டயர் பஞ்ச்சர்!
சைக்கிளை தள்ளிக்கொண்டு சினிமாவை விமர்சித்துக்கொண்டே மாமா நடக்க, சைக்கிள் சீட்டை ஒரு கையிலும் உயிரை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டே நான்!
ஆள் அரவமற்ற சாலை, பௌர்ணமி இரவு, சில்வண்டு + தவளைகளின் இரைச்சல் மற்றும் நாய்களின் கோஷ்டி கானம் (துஷ்ட சக்திகளின் ஆற்றல் அந்த இரவில்தான் பயங்கரமாக இருக்கும் என சிற்றூரின் கதை சொல்லிகள் வண்டி வண்டியாய் சொல்லியிருந்த பேய் பிசாசு ஏவல் பில்லி சூனியம் ரத்தக்காட்டேரிகள் எல்லாம் நான் தாண்டி நடந்த ஓவ்வொரு புதரின் பின்னும் ஒளிந்திருப்பதாக கற்பனை செய்துகொண்டு) தந்த உச்ச பயத்தில் நான்... பத்து நிமிடத்திற்கொரு முறை நடப்பதை நிறுத்தச்சொல்லி, புதர்கள் இல்லாத சாலை ஓரமாக தேடித்தேடி ஒன் பாத்ரூம் ப்ரேக் ("கெளம்பறதுக்கு முந்தி ஒரு பானை தண்ணியை குடிச்சிட்டு வந்தியோ?!" என மாமாவின் கிண்டல் சிரிப்பு) என அந்த ஐந்து கிலோ மீட்டர்களை கடந்து ஊர் வந்து சேர்கையில் பின்னிரவு தாண்டி விடிவெள்ளியும் வந்தாச்சு!
படம் பார்த்து வீடு சேர்ந்து மறு நாளில் இருந்து வீட்டில் சித்திகள் சேர்த்து வைத்திருந்த சாணித்தாள் பாட்டு புத்தகங்களை (ஒரு நாலு அல்லது எட்டு பக்கம் மட்டுமே இருக்கும் கையடக்க நூல்கள்) ஆளுக்கு ஒருவராய் விரித்து...ஒரே கர்ண கடூர பாடல் மழையும் அதற்கான பரிசு (!) வசவுகளும் வீடெங்கும் இறைந்து கிடக்கும்...
வாழ்வில் மகத்தான பல தொழில்நுட்ப பயன்பாடுகள் வந்துவிட்டாலும் அந்த சிற்றூரின் பவுர்ணமி இருள் சாலையும் அந்த வெள்ளித்திரையும் தந்த உணர்வுகளுக்கு அருகில் இன்று வரையில் வேறெதுவும் நெருங்கக்கூட முடியவில்லை.
சினிமா மட்டுமல்லாது நவீன சமூக ஊடகங்களும் எளியோரின் சுமைகளை சற்றே இறக்கி வைத்து இளைப்பாறுதல் தரும் இடமாக இருக்கும் வரையில் நலமே. அதை விட்டுவிட்டு, 'அங்க கோயில / மசூதிய / சர்ச்ச இடிச்சிட்டானுவளாம்!", 'நாளைக்கு 300 கிமீ வேகத்தில புயலு கரய கடக்கப்போவுதாம்', "அதிர்ச்சித்தகவல்: வாணியம்பாடியில் சற்று முன்பு மூன்று ஏலியன் குட்டிகள் கண்டெடுக்கப்பட்டன" என்பதாக செய்திகள் பரப்பி கலவரம் / பயம் / பதட்டம் உற்பத்தி செய்யும் ஆலைகளாக மாறிப்போனது நாகரிக வளர்ச்சியின் பேரவலம்!
சமூக வலைத்தளங்கள் நம் ஒவ்வொருவரையும் ஒரு படைப்பாளியாக மாற்றும் ஆற்றல் கொண்டவை. படைப்பதும் அழிப்பதும் வேறு வேறு செயல் என்கிற அடிப்படை புரிதல் தொடர்ந்தால் மட்டுமே நல்லது நிகழும், சாதி மத மொழி இன வேறுபாடுகளின்றி எளியவர் இளைப்பாற முடியும்.
அப்படி ஈசியா இளைப்பாற விட்டுடுவமா நாம?!
பேரன்புடன்,
பாபுஜி
Picture Credit: The Times of India news article
அருமையான நினைவலைகள்🙏. திரைக் காவியங்கள், திரைச்சுவைகள், திரை ஓட்டங்கள் என பல உணர்வு நிலைகளை கடந்து இன்று பெரும்பாலும் திரைக்கூடங்களில் பாப்கார்ன் சுவை மட்டுமே நினைவில் நிற்கும் கொடுமையை என்ன சொல்ல?
பதிலளிநீக்கு