முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஃபீனிக்ஸ் பறவை

 


குழந்தையை தொலைத்தவர்கள்

-------------------------------------------------------------


அதிகாலையிலோ அந்தி மாலையிலோ சாலையில் கடந்து போகையில் ஏதாவதொரு வீட்டு கதவின் மேல் ஒரு கம்பீரமான ஆண் முகமோ, மதிக்கத்தக்கபெண் முகமோ நிலவுத்துண்டு போல மிதப்பதை / எட்டிப்பார்ப்பதை காணலாம்.


முன்னறியாத அந்த முகங்களில் எத்தனை முகங்களோடு நாம் இயல்பாய் புன்னகை பறிமாற முடிகிறது? ஏன்?


குழந்தையொன்று இன்னொரு குழந்தையை கண்டதும் கண்கள் விரிய வியந்து நோக்கி கள்ளமில்லாத சிரிப்பொன்றை உதிர்த்து, தன் உலகத்தின் இயக்கத்தை அதில் நிறுத்தி, மொழிகளின் தேவையின்றியே உரையாடத்தொடங்கும், உரையாடல் தொடரும், ஏதாவதொரு பெரியவரோ அல்லது நிகழ்வோ குழந்தைகளின் கவனத்தை கலைக்கும் வரை.


வளர்ச்சியின் ஏதோ ஒரு புள்ளியில் இந்த இயல்பான மொழிகளற்ற உரையாடல், எதிர்பார்ப்பற்ற நேசம், உரு மாறி வாழ்வியல் எந்திரத்தில் சிக்குண்டு சிதைந்து உருமாறி நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப கோபமாகவோ தாபமாகவோ மகிழ்வாகவோ ஏக்கமாகவோ ஒன்றுமற்ற உணர்வாகவோ மாறி மாறி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும், வாழ்நாளில் இறுதிப்புள்ளி வரை.


சோகத்தில் பெருஞ்சோகம் புத்திர சோகம் என்று சொன்னவர்கூட (தன்னுள்ளே இருந்த) குழந்தைத்தன்மையை இழந்த பெருஞ்சோகம் பீடித்த மனிதராகவே இருந்திருப்பார்.


இன்றைய தினத்தில் இந்த பதிவை படித்த பிந்தைய ஏதாவதொரு நொடியில் உங்கள் இருப்பு மறந்து, உங்களை நீட்டலும் மழித்தலும் செய்யும் வாழ்வெனும் பெரு இயந்திரத்தின் உருளைகளிலிருந்து மெல்ல நழுவி, ஒரே ஒரு நொடியேனும் குழந்தையாய் மறுபடி நம் உலகை பார்க்க முனையுங்கள்.


உங்கள் உள் இருந்து இறந்துபோன குழந்தை மீண்டும் உயிர்த்தெழும், உங்களது வாழ்வை அதி உன்னதமான தளத்திற்கு தன் பிஞ்சு விரல்களால் உங்கள் கரம் பற்றி மெள்ள அழைத்துச்செல்லும். தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை கற்பனைக்கதை என்று யார் சொன்னது?!

ஒரே ஒரு புன்னகை, மதிப்பீடுகளற்ற புன்னகை, இன்று ஒரு நாளில் ஒரு முறையாவது யாருடனாவது ஏதாவது ஒன்றினுடனாவது பகிருங்களேன்...



வாழ்வே தவம்.

(Pictures may be under copyright and I have used them here only for illustration)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...