குழந்தையை தொலைத்தவர்கள்
-------------------------------------------------------------
அதிகாலையிலோ அந்தி மாலையிலோ சாலையில் கடந்து போகையில் ஏதாவதொரு வீட்டு கதவின் மேல் ஒரு கம்பீரமான ஆண் முகமோ, மதிக்கத்தக்கபெண் முகமோ நிலவுத்துண்டு போல மிதப்பதை / எட்டிப்பார்ப்பதை காணலாம்.
முன்னறியாத அந்த முகங்களில் எத்தனை முகங்களோடு நாம் இயல்பாய் புன்னகை பறிமாற முடிகிறது? ஏன்?
குழந்தையொன்று இன்னொரு குழந்தையை கண்டதும் கண்கள் விரிய வியந்து நோக்கி கள்ளமில்லாத சிரிப்பொன்றை உதிர்த்து, தன் உலகத்தின் இயக்கத்தை அதில் நிறுத்தி, மொழிகளின் தேவையின்றியே உரையாடத்தொடங்கும், உரையாடல் தொடரும், ஏதாவதொரு பெரியவரோ அல்லது நிகழ்வோ குழந்தைகளின் கவனத்தை கலைக்கும் வரை.
வளர்ச்சியின் ஏதோ ஒரு புள்ளியில் இந்த இயல்பான மொழிகளற்ற உரையாடல், எதிர்பார்ப்பற்ற நேசம், உரு மாறி வாழ்வியல் எந்திரத்தில் சிக்குண்டு சிதைந்து உருமாறி நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப கோபமாகவோ தாபமாகவோ மகிழ்வாகவோ ஏக்கமாகவோ ஒன்றுமற்ற உணர்வாகவோ மாறி மாறி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும், வாழ்நாளில் இறுதிப்புள்ளி வரை.
சோகத்தில் பெருஞ்சோகம் புத்திர சோகம் என்று சொன்னவர்கூட (தன்னுள்ளே இருந்த) குழந்தைத்தன்மையை இழந்த பெருஞ்சோகம் பீடித்த மனிதராகவே இருந்திருப்பார்.
இன்றைய தினத்தில் இந்த பதிவை படித்த பிந்தைய ஏதாவதொரு நொடியில் உங்கள் இருப்பு மறந்து, உங்களை நீட்டலும் மழித்தலும் செய்யும் வாழ்வெனும் பெரு இயந்திரத்தின் உருளைகளிலிருந்து மெல்ல நழுவி, ஒரே ஒரு நொடியேனும் குழந்தையாய் மறுபடி நம் உலகை பார்க்க முனையுங்கள்.
உங்கள் உள் இருந்து இறந்துபோன குழந்தை மீண்டும் உயிர்த்தெழும், உங்களது வாழ்வை அதி உன்னதமான தளத்திற்கு தன் பிஞ்சு விரல்களால் உங்கள் கரம் பற்றி மெள்ள அழைத்துச்செல்லும். தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை கற்பனைக்கதை என்று யார் சொன்னது?!
ஒரே ஒரு புன்னகை, மதிப்பீடுகளற்ற புன்னகை, இன்று ஒரு நாளில் ஒரு முறையாவது யாருடனாவது ஏதாவது ஒன்றினுடனாவது பகிருங்களேன்...
வாழ்வே தவம்.
(Pictures may be under copyright and I have used them here only for illustration)
கருத்துகள்
கருத்துரையிடுக