சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்பது கால காலத்துக்கும் பொதுவான ஒன்று.
வேர்கள் (பற்பல இடங்களில் ஓடியிருந்தாலும்) எங்கிருந்தாலும் இரண்டே இரண்டு கிளைகள் கொண்ட பெருமரமாய் நம் கண் முன்னே மாறிக்கொண்டிருக்கிறது வாழ்வு.
எத்தனை வண்ணங்கள் வர்ணங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் கொண்டு பிரிக்க முயன்றாலும் திமிறிக்கொண்டு அத்தனை வர்ணங்களும் மனைவிகளின் இழுப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடிக்கொண்டிருப்பது ஒரே ஒரு கடவுளின் அருள் வேண்டி மட்டுமே.
பொருளாதாரத்திலே பொருள்தான் கடவுளென்றால் தாரம்தானே மனைவி!
(ஆ)தார இழுப்பின் பின்னால் நான்கு வர்ணமும் தம் வர்ணம் கலைக்காமலே ஓடி கடவுளை தரிசிக்க நிற்கையில் அங்கு இருப்பது இரண்டே வரிசை; இருப்பவர் வரிசை, இல்லாதவர் வரிசை.
இருப்பவர் சாதி, இல்லாதவர் சாதி.
இந்த இரு வரிசைக்குள்ளும், மேநாட்டு மங்கையரின் வட்ட வளைய கவுன் போல நம் அடையாளச்சின்னங்களை நம்மைச்சுற்றி வளையமிட்டு, நாம் பாதுகாப்பாக தனித்தனியே விலகி நிற்பது இந்த இரு வரிசைக்குள் ஏதாவது ஒன்றில் மட்டுமே!
இந்தக்கடவுள் சற்றே விசித்திரமானவர். சாதிகளில் சடங்குகளில் சம்பிரதாயங்களில் அவருக்கு துளியும் நம்பிக்கையில்லை. இவரது அருள் கிட்டினால் 'இல்லாதவர்' சாதியில் இருப்பவர், நொடியில் 'இருப்பவர்' சாதிக்கு மாறிப்போகும் மாயம் நிகழும்.
இதே வேகத்தில் 'இருப்பவர்' சாதிக்காரர் ஒருவர் 'இல்லாதவர்' சாதிக்கு தள்ளப்படும் துயரமும் நிகழும்.
வரிசை எதுவானாலும் தம் அடையாளங்களை சுமந்து மாறி மாறி ஓடி இரண்டில் ஏதோ ஒரு வரிசையில் நின்று அருள்வேண்டிக்காத்திருக்குது நம் சனம், அறியா சனம்.
'அது சரி... இல்லாத சாதிக்காரன் இருப்பவர் சாதிக்கு இந்தக்கடவுள் அருளால மாறிப்போகிற கொடுப்பினை கிடைச்சதும் வீட்டுக்கு போய் புள்ள குட்டிகளோட மகிழ்வா இருக்க வேண்டியதுதானே? அதை விட்டுட்டு ஏன் இப்படி மாறி மாறி வரிசைல நின்று இறை தரிசனம் தேடணும்?!' என்கிறீர்களா? நியாயமான கேள்விதான்.
வெகுநாட்கள் முன்னே ஒரு முண்டாசுக்கவிஞன் இருந்தானாம். அவன், 'பெரிதினும் பெரிது கேள்!' என்றானாம்.
அவன் யாரென்றும் தன் வாழ்நாளில் என்றவெல்லாம் சொல்லிச்சென்றான் என்றும் தெரியாத பெருங்கூட்டம், அவன் சொன்ன இந்த ஒற்றை வரியை மட்டும் இருகப்பற்றிக்கொண்டு, உலகம் முழுதும் இரண்டு வரிசைகளில் நின்று ஒற்றைக்கடவுளின் அருள் வேண்டுவது, பொருள் வேண்டுவது, இந்த அரைகுறைப்புரிதலினால்தானாம்!
பெரிதினும் பெரிது கிட்ட பொருள் மட்டுமே உதவுமென்ற கனவில், வேண்டுதலில், நித்த நித்தம் வரிசையின் நீளம் மட்டும் நீண்டுகொண்டே போகிறதாம்!!
(Images are fromdreamstimecomandddd used here for illustration purpose only)
கருத்துகள்
கருத்துரையிடுக