கும்பகோணத்தில் பல கட்டு வீடு, ரயில் மாதிரி. வாசலில் நுழைந்து கொல்லை சுவர் தொட சில மணி நேரம் ஆகும் :-)
ஏராளமான குரங்குகள், குட்டி முதல் மந்தி வரை. இஷ்டத்துக்கு நுழைந்து, கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடிவிடும். பின்கட்டு ஓட்டுக்கூரையில் அமர்ந்து உடைத்து உண்ண முயலும். உடைவது எதுவாக இருந்தாலும் கீழே கடப்பவர்மேல் அபிஷேகம்!
அம்மா ஆடுகல்லில் மாவாட்டுகையில் ஒத்தாசை செய்யும் அடுத்த வீட்டுப்பெண் ஏதோ வேலையாக சொல்லிக்கொண்டு நகர, சற்று நேரத்தில் அவர் வந்துவிட்டதாய் உணர்ந்து கதை பேசிக்கொண்டே அம்மா மாவரைக்க, மாவில் கை துழாவிக்கொண்டிருந்தது அம்மா உயரமுள்ள மந்தி ஒன்று!
பள்ளியிலிருந்து திரும்பி வீடு நுழைந்த சிறார்கள் நாங்கள், அலறிய அலறலில் மந்தி பதறி ஓட, அம்மாவுக்கு அப்பதான் தெரியும்! ஆனால் இந்தப்பதிவு அவர் பற்றி அல்ல. வாசு பற்றியது.
வாசு, என் பால்ய நண்பன், அடுத்த வீடு. விடுமுறை நாளில் நாங்கள் டவுசர் பாண்டிகள் கூடி எங்கள் வீட்டு மாடியில் வாழைப்பழங்கள் தின்றவண்ணம் நூற்றுக்குச்சி விளையாடுகையில் ஜன்னல் வழியே குதித்தது அதே மந்தி!
நாங்கள் அலறிய அலறலில் மொத்த தெருவும் பதறி ஓடிவர, சுவற்றில் தொற்றியபடி சில டவுசர்கள், கதவிடுக்கில் சில டவுசர்கள், மாடிப்படியில் பயத்தில் உருண்ட சில டவுசர்கள் என கணக்கெடுத்தால் ஒரு டவுசர காணோம்!
'ஐயையோ, வாசுவ காணமே, எங்க போனான்?' என பலர் தேட, 'மந்தி தூக்கிட்டு போய்ருக்குமோ' ன்னு இன்னொருத்தர் பிறாண்ட, பல நிமிடத்தேடலுக்குப்பின் ஒரு பொடியன் கத்தினான், 'நான் கண்டுபிடிச்சிட்டேன்!'.
அவன் சுட்டிக்காட்டிய இடத்தில், கட்டிலுக்குக்கீழ், ஒரு பாய்க்குள் தலை முதல் கால்வரை உடலை சுற்றிக்கொண்டு, வாசு, வாழைப்பழம் தின்றவண்ணம்!!!!
"கல்லுளிமங்கன்! கொஞ்சங்கூட பயமே இல்லையாடா?!!!!!" என காரியத்தில் கண்ணாயிருந்தவன் இன்றுவரை அப்படியே :-)
இந்த நிகழ்வு இன்றுவரையி்ல் அவன் வெட்கப்படும், ரசித்து சிரிக்கும் ஒரு மொமெண்ட்டாக ஆகப்போவது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை :-)
கருத்துகள்
கருத்துரையிடுக