தடுப்பு சுவர் தாண்டி வளையல் கரம் ஒன்று. சுதாரிப்பதற்குள் நறுக்கென்று உச்சந்தலையில் கொட்டு! 'அம்மாடியோவ்! என்ற அலறலோடு வாயில் இருந்த பாதி சப்பிய புளிப்பு முட்டாய் பறக்க, வலியில உசிரு போயி வந்தது.
"கௌன்டர் அட்டாக்! நௌ!" என முழக்கமிட்டு நாங்கள் மூவர், அரை டவுசரை இறுக்கிப்பிடித்தபடி வகுப்பிலிருந்து வெளியேறியபோதுகூட கேங் வாரின் உக்கிரத்தை அந்த நடுநிலைப்பள்ளி உணரவில்லை.
Search Squad, செக்சன் செக்சனாய் தேடினோம். எல்லா செக்சனிலும் க்ளாஸ் நடந்துகொண்டிருந்தது. Usual Suspects எல்லாம் ரெட்ட ஜடை குனிஞ்ச தல நிமிராம எளுதிகிட்டு...
"இது சாதாரண கொட்டு இல்ல; நாடி நரம்பெல்லாம் சண்டை வெறி புடிச்ச ஒரு பொண்ணோட கொட்டு" என கொய்யாப்பழ சைஸ் காயத்தை நான் தேய்க்க,
'கண்டிப்பா புளிப்பு முட்டாய்க்கோ வெள்ளரிப்பத்தைக்கோ ஆசைப்பட்ட ஒரு கூலிப்படை ஆளு செஞ்ச வேலையாதான் இருக்கும்!' என உறுதியாய் சொன்னான் சிங்காரவேல். என் டிகிரி தோஸ்த். அவனுக்கும் அடுத்த க்ளாசில் ஒரு வாயாடிக்கும் நிகழ்ந்த சண்டை சில நாட்களிலேயே Gang War ஆக வலுப்பெற, கொலாட்டரல் டேமேஜ் 'நங்'கென்று என் தலையில்.
எதிர் கேங் கடைசிவரையில் 'தெரியாது' என்று சாதித்ததாலும், கயவனையும் புனிதனாக்கும் புன்சிரிப்பு கொண்ட சாவித்திரி டீச்சரின் கனிவான மத்தியஸ்தாலும் கேங் வார் அன்றே முடிவுக்கு வர, அன்று மாலையே கேங் ப்ளஸ் எதிர் கேங் வெள்ளரிப்பத்தை கடித்தவண்ணம் ஒன்றாகவே நடந்து கலைந்தோம்.
மன்னார்குடி ராஜகோபுரத்தில் முதல் தளம் வரை குரங்கு மாதிரி தொத்தி ஏறுவோம். அங்குதான் சிங்காரவேல் எனக்கு ஒரு அற்புத செடியை அறிமுகப்படுத்தினான். ஒரு வகை புல் அது. பறித்து விரல்களால் அடிப்பகுதியை பிடித்துக்கொண்டால் நுனிப்பகுதி வட்டமடிக்கும், மெய்யாலுமே!
இன்று அந்த கோபுரத்தின் பழைய அடையாளங்கள் எதுவும் இல்லை. சிங்காரவேல் இன்றும்கூட அந்த மந்திரப்புல் மாதிரி உலகின் எந்த மூலையிலோ வட்டமடித்துக்கொண்டிருப்பான்...
கருத்துகள்
கருத்துரையிடுக