கார்ப்பரேட் கிரிமினலுக்கும் பொலிடிகல் கிரிமினல்சுக்கும் நடக்கும் போரில், பேசுகிறார்கள், அடிக்கிறார்கள், பேசுகிறார்கள், அடிக்கிறார்கள், ரத்தம் தெறிக்க தெறிக்க.
ஜல்லிக்கட்டு, மாணவன்டா, மீனவன்டா, கந்துவட்டி, சென்னை வெள்ளம் என புல்லாங்குழலின் ஓட்டைகளை நிரப்பி, தேவைக்கேற்ப திறந்து மூடி வாசித்தாலும் கதையில் சீவனில்லை. ஆடி காரின் மீது போலிரோ ஒன்று டைவ் அடித்து தாண்டி செல்கையில் விஷால் கூட விசிலடிக்க மறந்து வேடிக்கை பார்த்திருப்பார்!
ஒரு காட்சியில் டிசைனர் சூட்டில் கா. கிரிமினல், பொ.கிரிமினல் ஒருத்தரை அலேக்காக தூக்கி, தலைகீழாக, நெட்டுகுத்தாக்கி, அவரது தலையை தரையில் கடப்பாறை குத்து, சில குத்துக்கள், குத்தி சாய்க்கிறார், நம்மையும் சேர்த்தே...
நீ கார்பரேட் கிரிமினல், நான் கருவிலயே கிரிமினல் (கானாவுக்கு கானா, பஞ்ச் ப்ரம்மாதம்!) என இறங்கிக்கொண்டே போகும் வசனங்கள்... ஜெயமோகனா இது?!
மகா நதியை ஒரு குடத்தில் அடைத்தாலாவது தாங்கிக்கொள்ளலாம்; வெற்றிலை சாறு துப்பும் பாத்திரம் ரேஞ்சுக்கு... பணம் / புகழ் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் அந்தப்பொண்ணுக்கு யாராவது அறிவுரை சொல்வார்களா?
விஜய், சர்காருக்கு உயிர் கொடுக்க கடுமையாய் உழைத்திருக்கிறார். லட்சக்கணக்கில் ரசிகர்களுக்கு சிகரெட்டு, சாராயம் இல்லாமலே கிக் கிடைக்கும், பின் ஏன் ப்ரோ??
49 P பற்றி விழிப்புரை தந்த கதையில் இறுதியில் ஒரு அருமையான கேள்வி, முருகதாஸ் கேட்கத்தவறிவிட்டார். 210 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் ஜெயித்தால், அறுதிப்பெரும்பான்மை அரசு அமைப்பது எப்படி? அரசியல் அமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?
ஒருவேளை... சர்கார் -2? ஐயகோ!!!!!
(ஐ.எம்.ஒ என்று ஒரு பாடல் துவங்குகிறது. In My Opinion என்பதன் ஆங்கில சுருக்கத்தின் (IMO) தமிழ் வடிவாம். ஐயகோ!)
கருத்துகள்
கருத்துரையிடுக