உன் பிஞ்சுவிரல் என் சுண்டுவிரல் பற்றிய நொடியில் உலகம் பஞ்சாக, காற்றில் மிதந்து உயிர் வளர்த்த, உயிர் கரைந்த நாட்கள் உனது குழந்தை நாட்கள்.
எனக்கே தெரியாது என்னுள் பொதிந்திருந்த தாய்மை எட்டிப்பார்த்தது, உச்சி முகர்ந்தது. நான் தாயுமானேன்.
'உயரமான கட்டிடங்களெல்லாம் எப்படி குளிக்கும்?' என ஒரு நொடியில் கேள்வியாகி, 'மழை பெய்யும்போது குளிச்சிடும், வெயில்ல காஞ்சிடும்' என மறுநொடியில் விடையாகி குமிழுடைக்கும் சிரிப்போடு பள்ளிக்கு கைகோர்த்து நீ நடக்கையில் நான் பாடம் பயின்றேன்.
பள்ளியில் விட்டு, மனதின்றி திரும்பி வரும் பாதையெங்கும் கொட்டிக்கிடக்கும் நம் உரையாடலின் சொற்கோவைகள் கூழாங்கற்கள் போல. மழலை சிரிப்பு புழுதிபோல் என்னைச்சூழ, மகிழ்வோடு சுவாசித்து நடந்து கடந்த நாட்கள்... (இன்றும்கூட தகப்பன் விரல் பிடித்து அந்த சாலையில் நடந்துபோகும் ஏதோவொரு சிறுமியின் கண்களில் அவை படலாம், மகிழ்வு தரலாம்...)
வாழ்வெனும் பெருநதியில் அசைவிலா கூழாங்கற்களாய் சில்லிப்போடு என் நினைவுகளை சேர்த்துப்பிடிக்கும் இதுபோல பல கற்கள்.
இன்றொரு நாளில், வளர்ந்த பெண்ணாய் வாதிட்டு கோபமுற்று கதவடைத்து புறக்கணிக்க எத்தனிக்கும் என் பிஞ்சு விரலே, இந்த சுண்டுவிரல் உன் கதவு தட்டும், வெளியில் காத்திருக்கும், நீ வர தலை கோதும், அரவணைக்கும், உயிர் வளர்க்கும்.
இதற்கு வேறொன்றும் தெரியாது.
Me also........... ammavin comment
பதிலளிநீக்குExperience of every parent
பதிலளிநீக்கு