கண்ணி வெடியை மிதித்தவன் காலடியில்
அவன் வாழ்வு புதையுண்டு கிடக்கிறது...
காலை நகர்த்தினால் வாழ்வு முடிந்துவிடும்.
என்ன செய்வது?
நீங்கள் இப்போது மிதித்துக்கொண்டிருக்கும் கண்ணி வெடி ஒன்றா, இரண்டா...?!
பதினாறு செல்வமும் பெற்றால்தான் பெருவாழ்வு என எவரோ என்றோ சொல்லிச்செல்ல, அன்று புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் தலைமுறை தலைமுறையாய் நின்று கொண்டிருக்கும் வழியில் வந்தவர் நாம்.
'ஏன் மிதித்து நிற்கிறாய்?' என்று யாரேனும் கேட்டால்,'தெரியாதுங்க... எங்க கொள்ளுத்தாத்தா காலத்திலருந்தே இப்படித்தான்' என்போம், நம் கொ.தாத்தாவும் இப்படித்தான் யாருக்கோ பதில் சொன்னார் என்பதையே அறியாமல்!
அதென்ன பதினாறு? அதிலெங்கே கண்ணி வெடி?
காண்போம் வாருங்கள்!...
பதினாறு செல்வங்கள்:
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
கண்ணி வெடி: எது வெற்றி!
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
கண்ணி வெடி: எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என குரங்கின் குடல் முதல் நாம் உண்ணாத மருந்தில்லை! வாழ்வு தேய்கிறது, ஆயுள் நீள்கிறது!
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
கண்ணி வெடி: எவற்றிலும் பயன் மட்டுமே தேடும் மனது, மனிதரிலும் பயன் இருப்பதாய் தோன்றினால் மட்டுமே நட்பு பாராட்டும் நடைமுறை வாழ்வு.
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
கண்ணி வெடிகளில் மிகப்பெரியது! பெரும்பாதிப்பு உண்டாக்கக்கூடியது!
குன்றாத வளமை என்பதை பொருளீட்டுதல், தானியங்கள் பெருக்குதல் என்பனவாக தவறாக கற்பிதம் செய்து தறி கெட்டோடும் கூட்டம் நாம்!
ஏழு தலைமுறைக்கும் தீராத சொத்து சேர்த்தவன், எட்டாம் தலைமுறை தரித்திரத்தில் உழலும்!
குன்றா வளமை என்பது அனைத்துயிரின் தேவைக்கும் பகிர்ந்தபின்னும் குறையாத வளமை, அட்சய பாத்திரம்...
அட்சயமல்ல, பாத்திரம்தான் அவசியம். பாத்திரம் எது?!
பூமிப்பாத்திரத்தை நாம் சுரண்டும்
ஓசை இடையறாது எங்கெங்கும்!
பசுமை குன்றா மண்ணைப்போற்றும் விதமாய் இருந்த, தொடர வேண்டிய நம் வாழ்வு, பேராசை நுகர்வெனும் கண்ணி வெடியில் நிறுத்தியிருப்பது நம் பாதங்களை மட்டுமல்ல, இப்புவியின் அச்சாணியையும்கூடத்தான்!
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
கண்ணிவெடி: இன்றைய நஞ்சுதோய்ந்த உணவு! உழைக்க வலிமையற்ற தளர்ந்த உடல் அனைத்து வயதினர்க்கும்!
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
கண்ணி வெடி: இன்றைய மருத்துவம். நலமாய் வாழவும் விடாது, நலிந்து சாகவும் விடாது!
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
கண்ணி வெடி: அடுத்தவர் வாழ்வு கண்டபடியே நாமும் ஓடும் போட்டி ஓட்டம், சலித்து துளைத்து உளைச்சலில் துவைத்துவிடும். கலங்காதிரு மனமே என சொல்வதற்கே நேரமில்லை!
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி) / கணவன்
கண்ணி வெடி: நம்மில் அநேகருக்கு அதிகமாய் பரிச்சயமான ஒன்று! வாழும் வரை வீராப்பாய் கால் நகர்த்தாமல் நின்றால்... குடும்பம் சிதறாது :-)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
கண்ணி வெடி: நாம் தவற விட்டதை அடுத்த தலைமுறையிடம் எதிர்பார்ப்பது!
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
கண்ணி வெடி: எது கீர்த்தி எது புகழ் என சொல்லித்தரவும் கேட்டு உணரவும் நேரமற்ற வாழ்க்கை!
11.மாறாத வார்த்தை (வாய்மை)
கண்ணி வெடி: அப்படீன்னா?! ('பேச்சு பேச்சோட இருக்கணும்!')
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
கண்ணி வெடி: பெரிதினும் பெரிது தேடும் உலகில் தலைக்கு என்ன மிஞ்சுவது தானம் எங்கே செய்வது?!
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
கண்ணி வெடி: பன்னிரெண்டாம் வெடியில் இதுவும் பணால்!
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
கண்ணி வெடி: கோலாட்டமும் குதூகலமுமாய் மண இணை! இதில் கோல் எப்படி கோணாது போகும்?! வீட்டு நிர்வாகம் நண்டு சுண்டுகளின் கையில் (அவர்கள் இருக்கும் வீடுகளில்!). அவர்கள் கோலசைத்தால் பெரிதினும் பெரிது வேண்டி ராப்பகலாய் உழைக்கும் பெற்றோர் இருவரும் கடல் மணலையும் கயிறாக்கி விற்கும் பெருவணிகச்சந்தைகளில் 'அன்பு' வாங்கித்தருவர், அளவுக்கதிகமாய்!
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
கண்ணி வெடி: 'பெரு'மக்கள் தொடர்பு கைகளில் தங்க காப்பு பூட்டும், பின் 'காப்பு'ம் பூட்டும் :-)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)
கண்ணி வெடி: வீதிக்கு இரண்டு கோவில் புதிதாய் கட்டி, பழையன தவிர்த்து, மண் தரை தெரியாது மெழுகி (இறை பாதம் துய்யதாய் இருக்கவேண்டி!) தளமிட்டு, கல் பதித்து... நம்மைத்தவிர ஏனைய உயிரெதுவும் உள்நுழையாது காத்து...
பதினாறை சிந்தித்து வகைப்படுத்தியவர் இந்த வெடிகளில் இருந்து நம்மை விடுவிக்கும் சிந்தனயை நாலில் (4. குன்றாத வளமை) 'விதை'யாய் புதைத்தார். இந்த நான்காவதை மட்டும் நாம் காத்தாலே போதும், பெருவாழ்வு வாழலாம், பதினாறும் இன்னும் பலவும் தானே கிட்டும்!
'நான்கு' வளம் பெற, குன்றாது வளர நாம் செய்ய வேண்டியது மரம் நடுவது மட்டுமே!
இனியொரு மரம் நடுவோம் அதை எந்த நாளும் காப்போம்! பெருவாழ்வும் பல்லுயிரும் அதில் தானே விளைந்து பெருகும். நம் வாழ்வையும் நனைக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக