கோலம் பார்த்திருக்கிறீர்களா? புள்ளி வைத்து கோடிழுத்து?
மாக்கோலம் கோலத்துள் எல்லாம் தலை, ஏனெனில் அது எறும்புக்கும் ஏனைய உயிர்க்கும் உணவளிக்கும் உன்னதக்கலை.
சமையலறையில் மட்டுமே அடைந்திருந்த பெண்கள் மனச்சிறைகளில் முடங்கிவிடாமல் கற்பனைத்திறன் வளர்த்து புள்ளிகளிலும் கோடுகளிலும் தம் எண்ணத்திறத்திற்கேற்ப செய்த மாயம், எறும்புக்கும் ஏனைய உயிர்க்குமான விருந்து உபசரிப்போடு இணைந்தபோது ஒரு பண்பாடு பண்பட்டது.
காட்டில் கதிரடித்து நெல்மணிகள் உதிர்த்து, சேர்த்து, மூட்டை கட்டி வீடு சேரும். அதில் ஒரு கையளவு உரலில் ஏறி தோலுறிந்து அரசியாகி, அரிசியாகி சேரும். முழு அரிசி சோறுக்கும், உடைந்த அரிசி 'நொய்'யென்று ஏனைய உணவுக்கும் சேமிக்கப்படும். மிஞ்சிய அரிசித்துகள்கள் அரைபட்டு 'கோலமிடும்' மாவாகும். எறும்புக்கு உணவாகும். கதிரோ கால்நடைகளுக்கும் இன்ன பிற உயிரினங்களுக்கும் உணவாகும்.
நம் ஆதி'வாசிகள்' நெல் வீணாவதைக்குறைக்க என்று எந்த திட்டமும் இட்டதில்லை கதிரடிக்கையில். ஏனெனில் இந்த உணவு அனைத்துயிருக்குமானது என்ற அவர்களின் தெளிவான புரிதல். வீண் என்ற வார்த்தையையே அறிந்திராத சமூகம் அது;பூமியின் எல்லை வரை பரவி வாழ்வு காத்தது அது.
கானகத்தில் வசிப்பவர் மட்டுமே ஆதிவாசிகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். தரை நிலங்களில் காடு திருத்தி கழனி அமைத்த கூட்டமும், கடலோடி கடலுணவு கொணர்ந்து நில உணவு கிட்டாதபோதும் உயிர்ப்பசி தீர்க்கும் கடலோடிகளும் ஆதிவாசிகள்தான். இவர்களே இவ்வுலகின் ஆதி வாசிகள்.
கத்தியின்றி ரத்தமின்றி வந்த இன்னொரு யுத்தத்தால் இவர்கள் அனைவரும் புலம் பெயர்க்கப்படுகிறார்கள். இந்த யுத்தம் முடிவற்ற யுத்தம்...
புலம் பெயர்தல் என்ற சொல்லையும் நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை, இன்றுவரை. இந்த சொல்லை நிலையற்ற புவியெல்லைகளுக்குள் அடக்காமல் ஆதிவாசிகளின் இடத்திலிருந்து சிந்தித்தால் மட்டுமே இதன் வலி புரியும்.
Zero waste mantra for profit maximization ('வீணடிப்பதை ஒழித்து ஈட்டுதலைப் பெருக்கும்' மந்திரம்) என்ற முழக்கத்தோடு இம்மூன்று ஆதிவாசி இனங்களையும் அவர்களின் இடத்திலிருந்து பெயர்த்து பொருட்குவிப்பு மையங்களான பெரு நகரங்களை நோக்கி நகர்த்தும் இந்த மந்திர யுத்தம், இறுதியில் வீணென்று விட்டுச்செல்லப்போவதென்னவோ நம் பூமியை மட்டும்தான் என இறுமாந்து செவ்வாயில் உணவு படைக்கும். செவ்வாய் வெறுவாயாகுமுன்பே (when we repeat the same process, result must also be the same each time, right?) நீர்தேடி மீண்டும் தொடரும் நெடும்பயணம்.
எங்கு முடியும் யுகங்களின் ஊடான இந்த நாடோடி வாழ்வு?
எந்தவொரு வீணையும் நலம்கெடும், புழுதியில் விழும், இந்த விரல்கள் பட்டால்.
கோலத்திற்கு வழிகாட்டும் புள்ளிகள் அந்தக்கோலத்துக்குள்ளே சிக்கித்திணறுவதுபோல, நம் கால்படும் பகுதிகள் அனைத்தையும் நம் கோலத்திற்குள் சிறை வைப்போம்.
பெருநகர நுகர்வில் (consumption) மயங்கி, மயக்கத்தின் எல்லையையும், அதற்கான விலையையும் உணர்ந்த ஆதிவாசிகள் விழித்து, ஒற்றை ஒற்றையாய் தம் தொல்பூமி நோக்கி மற்றொரு நெடும்பயணம் தொடங்கிய முதல் 'புள்ளி', கோலம் உடைத்து மீட்டெடுக்கும் புழுதி வீணையை.
மீட்டத்தொடங்கும் ஒற்றை விரல் பல விரலாகும். மீட்ட மீட்ட பல்லுயிர் கசியும், வீணையிலிருந்து. இசை கேட்டு மயங்கி பெருங்கூட்டம் மீண்டு வரும், மீண்டும் வரும்!
இதுவும் கூட யுகங்களின் ஊடான பயணத்தின் அங்கமாகலாம் அல்லது இறுதியாகலாம். And we all live happily ever after!
பயணம் சுகம். அதைவிட முக்கியம் எங்கிருந்து எங்கு என்பது. உணர்ந்து பயணிப்போம். பல்லுயிர் சூழலில் சந்திப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக